புதிய இளைய ஆதினமாக பிள்ளையார்பட்டி திருநாவுக்கரசை நியமித்த மதுரை ஆதினம்
மதுரை: மதுரை ஆதினத்தின் இளைய ஆதினமாக பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த வைத்தியநான் - இந்திரா தம்பதியரின் 6வது மகனாக உள்ள திருநாவுக்கரசு, 38 என்பவர் நியமிக்கப்படுவதாக 292வது மதுரை ஆதினம் அருணகிரி நாதர் அறிவித்தார். மதுரை ஆதினத்தின் 292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் இன்று திருநாவுக்கரசுவை 293வது ஆதினமாக நியமித்து பட்டம் சூட்டினார்.
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த மதுரை ஆதினம் கடந்த சில மாதங்களாக இருக்கும் இடம் தெரியாமல் அமைதி காத்து வந்த நிலையில் இன்று புதிய முடிவை அறிவிப்பார் என்று ஆதினம் வட்டார தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் இளைய ஆதினத்தை நியமித்து பட்டம் சூட்டியுள்ளார்.
கடந்த 5 ஆண்டு காலமாக அதிமுக அரசுக்கு ஆதரவாக பேசி வந்தார். லோக்சபா தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தார் அதிமுகவினரை விட அதிகம் அம்மா புராணம் பாடியது ஆதினம்தான் என்றால் மிகையாகாது. ஆட்சிக்கு தகுந்தாற்போல் தி.மு.க.விடமும், அ.தி.மு.க.விடமும் நெருக்கம் காட்டி வருவார் ஆதினம். அதன் பின் எம்.நடராஜனின் நண்பரானார். அவரின் ஆன்மீக வாழ்க்கையில், நித்யானந்தவுடன் ஏற்பட்ட தொடர்பு சர்ச்சையை உருவாக்கியது.
நித்யானந்தாவினால் சர்ச்சை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தாவை இளைய ஆதினமாக நியமித்தார். கடும் எதிர்ப்பு எழவே அவரை நீக்கி சர்ச்சையிலும் சிக்கினார். நித்தியானந்தா மடத்தைவிட்டு போனாலும், நித்யானந்தாதான் இளைய ஆதீனம் என்று தாக்கல் செய்த வழக்கும், தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அதிமுகவிற்கு பிரச்சாரம்
இந்த வழக்குகளில் இருந்து விடுபடத்தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதாவை சந்தித்து லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்ய உத்தரவு வாங்கினார். அதற்கு தகுந்தாற்போல் பல ஊர்களில் பிரசாரம் செய்தார்.

கனவில் வந்த சிவன்
தனது கனவில் சிவபெருமான் வந்து புரட்சித்தலைவி அம்மாவிற்கு ஆதரவாக வாக்கு கேட்டுமாறு உத்தரவிட்டதாக கூறினார். அதிமுகவிற்காக பல ஊர்களில் பிரச்சாரம் செய்தார்.

யாகம் நடத்திய ஆதினம்
ஜெயலலிதா சிறையில் இருந்தபோது அதை கண்டித்து அதிமுகவினர் நடத்திய பல போராட்டங்களில் கலந்து கொண்டார். ஜெயலலிதா விடுதலைக்காக நடந்த பல யாகங்கள், பூஜைகளில் முன்னிலை வகித்தார். அம்மா மீண்டும் முதல்வராவார் என்று அருள் வாக்கு சொன்னார்.

சரத்குமாருக்கு ஆதரவு
தன்னை ஒரு அ.தி.மு.க. நிர்வாகிபோல் மாறி, வேலை திட்டத்தை அமைத்து செயல்பட்டுக் கொண்டிருந்த ஆதீனம், நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணிக்காக தன்னுடைய மடத்திலயே பிரசாரம் செய்தார்.

அமைதி காத்த ஆதினம்
கடந்த சில மாதங்களாக அமைதி காத்து வந்த ஆதினம், அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு அழைத்தும் செல்லவில்லையாம். அவருடைய இடத்தை அதிமுக தரப்பு கட்சி அலுவலகம் வைப்பதற்காக கேட்டதாக கூறப்படுகிறது.

இளைய ஆதினம் நியமனம்
ஆதினம் அருணகிரிநாதர், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். தனக்கு பின்பு இளைய ஆதினமாக பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த வைத்தியநான் - இந்திரா தம்பதியரின் 6வது மகனாக உள்ள திருநாவுக்கரசு, 38 என்பவர் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். மதுரை ஆதின மடத்தின் இளைய ஆதினமாக இன்று அவருக்கு பட்டம் சூட்டப்பட்டது.

யார் இந்த திருநாவுக்கரசு
திருநாவுக்கரசு அழகப்பா பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டமும், தருமபுரம் ஆதின மடத்தில் உள்ள கல்லூரில் இளைய பட்டமும் பெற்றவர். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தேவஸ்தான வேதஆமகவித்தியாலாவில் முறையாக சமஸ்கிருத கல்வியில் பயிற்சி பெற்றவர்.

293வது ஆதினம்
திருநாவுக்கரசுவுக்கு ஆகம விதிப்படியும், மதுரை ஆதின மடத்தின் மரபு படியும் தீட்சிதை செய்து இளவரசர் பட்டம் சூட்டி 293வது ஆதினமாக பட்டம் சூட்டப்பட்டார். இதை முறைப்படி ஆவணங்கள் மூலம் இந்து அறநிலையத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications