சிவனோட "ஜி.ஓ" வந்திருச்சு போல... 'அம்மா'வுக்காகப் பிரசாரம் செய்யப் போகிறாராம் மதுரை ஆதீனம்!
தஞ்சாவூர்: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை ஆதரித்து, அவர் போட்டியிடும் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் தனக்கு வெற்றியைத் தந்த, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியிலேயே சட்டசபைத் தேர்தலிலும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மற்ற கட்சிகளும் பிரபல வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு ஆதரவாக ஆர்.கே.நகரில் வாக்கு சேகரிக்கப் போவதாக அறிவித்துள்ளார் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரியார்.
இது தொடர்பாக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியத்தில், அவர் செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது:-
முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து, சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அடுத்த வாரம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். இத்தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று, மீண்டும் ஜெயலலிதா ஆட்சியமைப்பார்.
இதற்காக, தஞ்சை, வேதாரண்யம், ராமநாதபுரம், திருவாடானை, மதுரை, போடி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய உள்ளேன்.
சிறப்பாகப் பணியாற்றி வரும் தேர்தல் அதிகாரிகளை மாற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. இதனால் மக்களின் மனதை மாற்ற முடியாது. ஆன்மிகவாதிகள் அரசியலில் ஈடுபடுவதில் தவறில்லை" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எப்போதும் தனது செயல்களுக்கு 'சிவன் உத்தரவு' எனக் கூறுவது மதுரை ஆதீனத்தின் வழக்கம். அந்த வகையில் தற்போது ஜெயலலிதாவிற்காக பிரச்சாரம் செய்யவும் அவருக்கு உத்தரவு கிடைத்து விட்டது போல.












Click it and Unblock the Notifications