இதுல என்ன தப்பு? கருணாநிதி பேரன், முதல்வரின் மகன்! அதனால உதயநிதி துணை முதல்வர்! மதுரை ஆதீனம் ஆஹா ஓஹோ
மயிலாடுதுறை: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானதில் எந்த தவறும் இல்லை என மதுரை ஆதீனம் 293 ஆவது மகா சன்னிதானம் தெரிவித்துள்ளார்.புதிய நாடாளுமன்றத்திற்கு செங்கோல் வழங்கிய மதுரை ஆதீனம் தற்போது திமுக அரசுக்கு ஆதரவாக பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மயிலாடுதுறை அருகே உள்ள சின்னநாகங்குடியில் நேற்று ஒரு திருமண நிகழ்வில் மதுரை ஆதீனம் 293 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தம்பிரான்கள் ஆதீனத்திற்கு கட்டுப்பட்டவர்கள். நான் தருமபுரம் ஆதீனத்தில் தம்பிரானாக இருந்தேன். அந்த கட்டுப்பாட்டை மீறாமல் நடந்தேன். ஆதீனங்களுக்கான விதிமுறைகளை வகுப்பது, ஆதீனகர்த்தர்கள்தான் என்றார்.
அப்போது செய்தியாளர்கள், அவ்வாறு விதிமுறைகளை மீறி நடப்பவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்ற கேள்விக்கு, அவர் சிரித்தவாறே எங்கேயோ சுற்றி எங்கேயோ போகிறீர்கள் என சூரியனார்கோயில் ஆதீனம் திருமணம் செய்து கொண்ட சர்ச்சைக் குறித்த விவகாரத்தை பேசாமல் தவிர்த்தார். மேலும் ஒரு மடத்தை பற்றி மற்றொரு மடத்தில் இருந்து கருத்து சொல்ல கூடாது.
அவர்கள் எந்த ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்களோ அவர்களே தீர்வு சொல்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, அவர், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடையாது. பிரதமர் மோடி மிகவும் வலிமை வாய்ந்தவர்.
அவரது நடவடிக்கையால் சீனாவே பின்வாங்கிவிட்டது, மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கோட்டை விட்டதை மோடி நிமிர்த்திவிட்டார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டதில் ஒன்றும் தவறில்லை. அது முதல்வரின் விருப்பம். அவர் கருணாநிதியின் பேரன், தமிழக முதல்வரின் மகன் என்ற முறையில் நியமித்திருக்கலாம். அப்படி நியமித்தது தவறில்லை என்றார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற நவக்கிரக ஸ்தலமாக விளங்குகிறது சூரியனார் கோயில். இந்த ஆதீனத்தின் 28ஆவது மடாதிபதியாக இருப்பவர் மகாலிங்க சுவாமி. இவருக்கு வயது 54. இவர் தற்போது 47 வயதாகும் பெங்களூரை சேர்ந்த ஹேமா ஸ்ரீ என்ற பக்தையை திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆதீனம் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்த்து வருகிறார். ஒரு முறை விஜய் குறித்த கேள்வியையும் தவிர்த்தார். அவர் கூறுகையில் விஜய்ய பத்தி நான் எதுவும் சொல்ல விரும்பலை. அப்புறம் அவங்க ரசிகர்கள் என்னை கல்ல விட்டு அடிக்கவா? பவன் கல்யாண் யாரு, எனக்கு அவரை தெரியாது, அவர் ஆந்திரா துணை முதல்வராக இருந்தால் நம் தமிழகத்திற்கு என்ன பிரச்சினை?
பழனியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாட்டுக்கு என்னை தமிழக அரசு சார்பில் அழைத்தார்கள். அதற்காக நான் சென்றேன். என்னை அவர்களாகவே கூட்டிச் சென்று கூட்டி வந்தனர். மிகவும் மரியாதையாக நடத்தினார்கள். வாராது வந்த மாமணியே என என்னை அழைத்தார் என கூறிய மதுரை ஆதீனம், துணை முதல்வரான உதயநிதிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
என்னை அரிவாளால் வெட்ட வந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். போனால் என் உயிர்தானே போக போகிறது, போகட்டும். பெரிய ஆதீனம் துப்பாக்கி வைத்திருந்தார் என கூறிய அவர் தன்னிடமும் துப்பாக்கி இருப்பதாக சொல்லிவிட்டு பின்னர் தன் வாயே துப்பாக்கிதான் என்றார். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோலை மதுரை ஆதீனம்தான் கொண்டு போய் பிரதமரிடம் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications