மதுரையில் பயங்கரம்.. அதிமுக கவுன்சிலரை வெட்டிக் கொன்ற 10 பேர் கும்பல்
மதுரை: மதுரையில் நேற்றிரவு மாநகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவர் மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன். இவர் அந்த பகுதியான மாநகராட்சி 51 ஆவது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர். இந்நிலையில் இவர் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றின் முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது 10 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள்களில் வந்து அங்கு இறங்கியது. திடீரென்று கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல், தங்கள் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து விஜயராகவனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த விஜயராகவன் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து போனார். இந்த பயங்கர கொலை சம்பவம் முனிச்சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது அரசியல் உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட விஜயராகவனின் தந்தை கிருஷ்ணமூர்த்தி. இவரும் அ.தி.மு.க. பிரமுகர் ஆவார். 51 ஆவது வார்டு முன்னாள் அ.தி.மு.க. வட்ட செயலாளர். தற்போது கைத்தறி வாரியத்தில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications