மதுரை வருகிறார் அழகிரி... ஆர்வம் + எதிர்பார்ப்பில் ஆதரவாளர்கள்
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று மதுரை செல்கிறார். அங்கு தனது ஆதரவாளர்களைச் சந்திக்கவுள்ளார். அப்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர் என்ன சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்தில் அழகிரி ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திமுகவின் தென் மண்ட அமைப்புச் செயலாளராக இருந்தவர் அழகிரி. அவரது ஆதரவாளர்களின் செயல்பாட்டால் அடுத்தடுத்து 10 பேரை கட்சியை விட்டு நீக்கியது திமுக தலைமைக் கழகம். மேலும் மதுரை திமுக நிர்வாகிகளும் கூண்டோடு நீக்கப்பட்டனர். இதனால் கோபமடைந்த அழகிரி கட்சித் தலைவர் கருணாநிதியிடம் முறையிட்டார்.

இருப்பினும் அழகிரி ஆதரவாளர்களின் செயல்பாடு தொடரவே அழகிரியையே கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கி விட்டது திமுக. இதனால் அழகிரி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில், மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடியிருந்தார் அழகிரி. இந்த நிலையில் இன்று அவர் மதுரை செல்கிறார். அங்கு தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தவுள்ளார்.
மேலும் வருகிற 30ம் தேதி அழகிரி பிறந்த நாள் வருகிறது. அதை இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக கொண்டாடுவோம் என்று அழகிரி ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். எனவே இன்றோ அல்லது பிறந்த நாளன்றோ தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அழகிரி அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்த மாட்டேன், திமுக தானாகவே தோற்கும் என்று ஏற்கனவே அழகிரி கூறியுள்ளார். எனவே அவரது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து அழகிரி ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் மற்ற அரசியல் கட்சியினர் தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications