குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த மதுரை சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி
குற்றாலம்: குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த மதுரையைச் சேர்ந்த சிறுவன் கிணற்றில் விழுந்து பலியானான்.
மதுரை விளாங்குடியை சார்ந்த பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் குற்றாலத்திற்கு இன்று ஒரு வாகனத்தில் சுற்றுலா வந்துள்ளார். பின்னர் குற்றாலம் மெயின், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்து விட்டு கடைசியாக பழைய குற்றாலம் அருவியில் குளித்து விட்டு மத்தாளம் பாறை என்ற ஊருக்கு செல்லும் வழியில் உள்ள தனியார் தோப்பில் குடும்பத்தோடு ஓய்வு எடுத்துள்ளனர்.
அப்போது அவரது 11வயது மகன் விக்னேஷ் என்பவன் மலம் கழித்துவிட்டு அந்த தோப்புக்குள் இருந்த கிணற்றில் இறங்கி கால் கழுவ சென்றுள்ளான். அப்போது கால் தவறி கிணற்றுக்குள் சிறுவன் தவறி விழுந்து விட்டான். இதில் நீரில் மூழ்கி சிறுவன் பலியானான்.
கால் கழுவ சென்ற மகனை காணாமல் கிணற்று பக்கம் சென்று பார்த்த தந்தைக்கு மகன் கிணற்றில் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அலறினார். தகவல் அறிந்து குற்றாலம் போலிசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு உடல் கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் சிறுவனின் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.