தீ கட்டுக்குள் வந்தது, ஆயிரம்கால்மண்டபத்திற்கு பாதிப்பில்லை... ஆட்சியர் வீரராகவராவ்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ முழுவதும் கட்டுக்குள் வந்துள்ளதாக ஆட்சியர் வீரராகவராவ் கூறியுள்ளார்.
Recommended Video

மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ முழுவதும் கட்டுக்குள் வந்துள்ளதாக ஆட்சியர் வீரராகவராவ் கூறியுள்ளார். கோயிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தீ விபத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடந்த தீ விபத்து குறித்து அனைத்துத் துறையினருடன் ஆட்சியர் வீரராகவராவ் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் வீரராகவராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது : அருள்மிகு மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் இருக்கும் கடைகளில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து தகவல் வந்த உடனே அனைத்துத்துறை அலுவலர்களும் நேரடியாக விபத்து நடந்த பகுதிக்கு வந்தோம். உடனடியாக தீயணைப்புத் துறையின் 5 வாகனங்களும் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நள்ளிரவு 1 மணிக்குள்ளாக தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறை, கோவில் நிர்வாகம், 60 தீயணைப்பு வீரர்கள் என அனைவரும் ஒத்துழைப்போடு பணியாற்றியதால் தீ விபத்து பல பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக தீயை கட்டுப்படுத்தியதால் உயிர்ச்சேதமோ, யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை.

தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர், அதன் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, சிறப்பு பொறியாளர்கள் குழு அருகில் இருக்கும் கட்டிடங்களின் உறுதித் தன்மையை சோதித்து வருகின்றனர்.

ஆயிரங்கால் மண்டபத்திற்கு பாதிப்பில்லை
தீயில் எரிந்த பொருட்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அருகில் இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு எந்த பாதிப்பும்இல்லை, வீரவசந்தராயர் மண்டபத்தில் சுமார் 7 ஆயிரம் சதுர அடியில் தான் பாதிப்பு இருக்கிறது. அங்கு தீயில் கருகிய பொருட்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு அனுமதி
அனைத்துத் துறையினரின் ஒத்துழைப்பை கோரும் கூட்டம் கோயிலில் நடத்தப்பட்டுள்ளது. காலை முதல் வழக்கம் போல பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

போலீசார் விசாரணை
விபத்துக்கான காரணம் என்னஎன்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டத் தகவல் இது ஒரு விபத்து தான் என்று சொல்கிறது. தீ கட்டுப்படுத்தப்பட்டாலும் புகை வந்து கொண்டிருப்பதை கண்டு அஞ்சத் தேவையில்லை. கோவில் நிர்வாகத்தால் சுமார் 150 கடைகள் அங்கு செயல்படுகின்றன, இவற்றில் 36 கடைகள் சேதமடைந்துள்ளன என்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications