காதுகுத்துக்கு மொய் செய்யாததால் டார்ச்சர் கொடுத்தார் செல்லூர் ராஜூ- மதுரை வக்கீல் கிறிஸ்டி 'பரபர'
அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டு காது குத்துக்கு மொய் செலுத்தாதவர்களுக்கு டார்ச்சர் கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
Recommended Video
மதுரை: பேரன்களின் காது குத்து விழாவுக்கு மொய் செய்யாத காரணத்தால் தமக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ டார்ச்சர் கொடுத்தார்; அதனால் அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என மதுரை பெண் வழக்கறிஞர் கிறிஸ்டி தெபோராள் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
மதுரை பாண்டிகோவிலில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேரன்களுக்கு அண்மையில் காது குத்தும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக மதுரையே அல்லோகலப்பட்டது.
முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் தொடங்கி அமைச்சர்கள் பட்டாளம், அதிகாரிகள் கூட்டத்தால் காது குத்து நிகழ்ச்சி விமரிசையாக களை கட்டியது. அதேநேரத்தில் பல கோடி ரூபாய் மொய்ப் பணமும் இந்த காது குத்து மூலம் வசூலானது.
திமுகவில் சேர்ந்த அரசு வக்கீல்
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த அரசு வழக்கறிஞராக பணிபுரிந்த கிறிஸ்டி தெபோராள் நேற்று மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கிறிஸ்டி கூறியதாவது:
செல்லூர் ராஜூ டார்ச்சர்
2011-ம் ஆண்டு முதல் மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக பணியாற்றினார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எனக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பல நெருக்கடிகள் கொடுத்து வந்தார்.
அமைச்சரின் டார்ச்சர்
இதனால் மனவேதனையில் இருந்தேன். அண்மையில் அமைச்சரின் பேரன்களுக்கு காது குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்பின்னர் என் மீது கடும் கோபத்தில் இருந்தார் செல்லூர் ராஜூ.
மொய் பணம் செலுத்தாததால் கோபம்
காது குத்து விழாவில் நான் மொய் செலுத்தவில்லை. இதுதான் அவரது கோபத்துக்கு காரணம் என நினைக்கிறேன். இதனால் அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்துவிட்டேன். இவ்வாறு கிறிஸ்டி கூறினார்.
அதிமுக அடையாள அட்டை விவகாரம்
தெர்மகோல் விவகாரம், அதிமுக அடையாள அட்டை இருந்தால்தான் நலத் திட்ட உதவிகள் என தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ. இப்போது மொய் செலுத்தவில்லை என்பதற்காக கோபத்தை காட்டிய புகார் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.