தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்க பெப்சி, கோக்குக்கு ஹைகோர்ட் அனுமதி.. மக்கள் ஷாக்!
நெல்லை தாமிரபரணியில் இருந்து பெப்சி, கோக் ஆலைகளுக்கு தண்ணீர் எடுக்க அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் இருந்து பெப்சி, கோக் உள்ளிட்ட ஆலைகள் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீக்கியது. இந்த ஆலைகள் தண்ணீர் எடுக்க தடையில்லை என்றும் கூறியுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிரபாகர் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், 'தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் கொடுப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்பான நிறுவனங்கள் 1000 லிட்டர் தண்ணீருக்கு ரூ.37.50 மட்டுமே கொடுக்கின்றன.
இவ்வாறு குறைந்த விலைக்கு தாமிரபரணி தண்ணீரை எடுக்கும் நிறுவனங்கள், குளிர்பானம் மற்றும் குடிநீரை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றன. எனவே, அந்த நிறுவனங்களுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்கப்படுவதை தடை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரித்த நீதிமன்றம், குளிர்பான ஆலைகள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு தடை விதித்தனர். இந்த நிலையில் இந்த இடைக்கால தடையை நீக்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
குளிர்பான ஆலைகள் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடையில்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். ஆலைகளுக்கு உபரிநீரை மட்டுமே பயன்படுத்துவதாக குளிர்பான ஆலைகள் கூறியதை ஏற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
தாமிரபரணியில் தண்ணீர் எடுக்கப்படுவதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதுடன், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இதனால் இந்த ஆலைகள் தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும் கூறப்பட்டிருந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பொதுமக்களுக்கு எதிரான தீர்ப்பு ஒன்றினை அளித்துள்ளது.
வறட்சியால் தாமிரபரணியில் தண்ணீர் வற்றி 5 மாவட்டங்களுக்குக் குடி பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications