மு.க.அழகிரி மீதான வழக்கில் "அரசியல்" இல்லை, ரத்து செய்ய முடியாது... நீதிபதி உத்தரவு
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கில் எந்தவிதமான அரசியல் உள்நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரிய மு.க.அழகிரியின் கோரிக்கையையும் அவர் நிராகரித்து விட்டார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது கடந்த 26ம் தேதி நில அபகரிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தனது, தயா பொறியியல் கல்லூரிக்கு கோவிலுக்கு சொந்தமான 44 செண்ட் நிலத்தை அபரித்தார் அழகிரி என்று குற்றச்சாட்டில் அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்ற அழகிரி, தன் மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு பொய் வழக்கு என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் தன் மீது இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று மாலை விசாரணைக்கு வந்தது. அப்போது அழகிரி தரப்பில் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரியதை நீதிபதி கிருபாகரன் நிராகரித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த வழக்கில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. தவிர, போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு நில அபகரிப்பு நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, மனுதாரர் அழகிரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
மேலும், அழகிரி மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை 16 வாரங்களுக்கு கீழ் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி வழக்கை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு அழகிரிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.