மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக வழக்கு- நடிகர் கமல் நேரில் ஆஜராக விலக்கு!
மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக நடிகர் கமல்ஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கை வள்ளியூர் நீதிமன்றம் விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை : மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கமல்ஹாசன் விசாரணைக்கு நேரில் ஆஜராகத் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மார்ச் மாதம் 12ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நடிகர் கமல்ஹாசனின் நேர்காணலில் மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக வள்ளியூர் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வள்ளியூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் திருநெல்வேலி மாவட்டம் பழவூரை சேர்ந்தவரும், அங்குள்ள நாறும்பூநாதசுவாமி கோயில் பக்தர்கள் நலச்சங்க செயலாளருமான வை.ஆதிநாதசுந்தரம் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
அதில், இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் மகாபாரதத்தை இழிவுபடுத்தி அவதூறாக பேசியிருக்கும் கமல்ஹாசன் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதித்துறை நடுவர் செந்தில்குமார், இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பழவூர் போலீஸாருக்கு உத்தரவிட்டதோடு கமல்ஹாசன் நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கமல் மனு செய்திருந்தார். இந்த மனுவை இன்ற விசாரணைக்கு வந்த போது, அரசியலமைப்பு சட்டப்படி அனைவருக்கும் பேச்சுரிமை இருப்பதாக வாதிடப்பட்டது. இதனையடுத்து கமல்ஹாசன் மீதான வழக்கை விசாரிக்க வள்ளியூர் நீதிமன்றத்திற்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகத் தேவையில்லை என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.