தமிழ் உட்பட 22 மொழிகளை அலுவல் மொழியாக்கும் வழக்கு – மதுரை ஹைகோர்ட் தள்ளுபடி!
மதுரை: தமிழ் உட்பட 22 மொழிகளை தேசிய அலுவல் மொழியாக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து மதுரை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை வழக்கறிஞர் ராஜமாணிக்கம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது.
டெல்லி, உத்திர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம் தவிர மற்றவை இந்தி பேசாத மாநிலங்கள். அப்படி உள்ள நிலையில், மத்திய அரசின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உட்பட 22 மாநில மொழிகளை தேசிய மற்றும் அலுவல் மொழியாக அறிவித்திருக்க வேண்டும்.
தமிழகம், மேற்கு வங்க ஹைகோர்ட்களில் அந்தந்த மாநில மொழிகளை, வழக்காடு மொழிகளாக்க வேண்டும் என மத்திய அரசிடம் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மாநில மொழிகளை படிப்படியாக அலுவல் மொழியாக்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தி பேசாத மாநில மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
தமிழ், தெலுங்கு, உருது, கன்னடம் உட்பட, 22 மொழிகளையும் தேசிய மற்றும் அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி, மத்திய அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் கொண்ட குழு பிறப்பித்த உத்தரவில், "அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications