மதுரை மீனாட்சி கோவில் ஆவணி திருவிழா: செப்.2ல் பட்டாபிஷேகம், 4ல் புட்டுத்திருவிழா
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய அம்சமான சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. புட்டுக்கு மண் சுமந்த லீலை செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம் கடந்த 21ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து 21-ந் தேதி முதல் இன்று வரை சந்திரசேகர் புறப்பாடு 2ம் பிரகாரத்தில் நடைபெற்றது.
இறைவனின் லீலைகள்
நாளை முதல் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பற்றிய லீலைகள் தினமும் நடைபெறும். இதில் 27-ந் தேதி அன்று, முதல் நாள் கருங்குருவிக்கு உபதேசம், அடுத்தடுத்த நாட்களில் நாரைக்கு முக்தி கொடுத்தல் நடைபெறுகிறது.
தருமிக்கு பொற்கிழி
மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி அளித்தல், உலவாக்கோட்டை அருளியது, பாணனுக்கு அங்கம் வெட்டியது, திருஞான சம்பந்தர் சைவ சமய வரலாற்று லீலை ஆகியவை நடக்கின்றன.
சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் செப்டம்பர் மாதம் 2-ந் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் 7.54 மணிக்குள் சுவாமி சன்னதியில் நடக்கிறது.
இறைவன் கையில் ஆட்சி
அன்றைய தினம் சுவாமி சன்னதி முன்பு உள்ள மண்டபத்தில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடந்து, செங்கோல் வழங்கப்படும். அந்த செங்கோலினை சுவாமியின் பிரதிநிதியாக கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் பெற்றுக் கொண்டு 2-ம் வலம் வந்து, மீண்டும் இறைவனிடம் வழங்குவார்.
நரியை பரியாக்கிய இறைவன்
செப்டம்பர் 2ஆம் தேதி நரியை பரியாக்கிய லீலை நடைபெறுகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி விறகு விற்ற லீலை நடைபெறுகிறது.
புட்டுக்கு மண் சுமந்த இறைவன்
செப்டம்பர் 4ஆம் தேதி புட்டுக்கு மண் சுமந்த லீலை பொன்னகரம் பகுதியில் உள்ள புட்டுத்தோப்பில் நடக்கிறது. அன்றைய தினம் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் சுவாமி கோவிலில் இருந்து புறப்பாடாகி, ஆவணி மூல வீதி, சிம்மக்கல், பொன்னகரம் வழியாக புட்டுத்தோப்பு சென்றடைகிறார்கள். அங்கு புட்டுக்கு மண் சுமந்த லீலை நிகழ்த்தி, மீண்டும் கோவிலுக்கு வரும் வரை கோவில் நடைசாத்தப்பட்டிருக்கும்.
தீர்த்தவாரி
பின்னர் 6ஆம் தேதி சட்டத் தேரில் இறைவன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 7ஆம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.