நரேந்திர மோடி தேநீர் விடுதி மற்றும் பலசரக்கு அங்காடி.. இது மதுரையில்
மதுரை: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பெயரில் டீக்கடைகள் மற்றும் பலசரக்குக் கடைகளைத் திறக்க ஆரம்பித்துள்ளன பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புகள்.
மோடி டீ விற்றவர் என்று காங்கிரஸ் கட்சியினர் கிண்டலடிக்கப் போக அதையே பிடித்துக் கொண்டு டீக்கடைகளைத் தொடங்கி அதன் மூலம் மோடி ஆதரவுப் பிரசாரத்தை பாஜகவினர் ஆரம்பித்து வி்ட்டனர்.
இப்போது பாஜகவினரின் பிரசாரத்தில் டீக்கடைக்காரர்களும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கவும் ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் மதுரையில் பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சார்பில் டீக்கடைகள், பலசரக்குக் கடைகளை தொடங்கி அதன் மூலம் மோடி ஆதரவுப் பிரசாரத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இதற்காக நரேந்திர மோடி பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கியுள்ளனர். இவர்கள், மதுரை நகர் மற்றும் ஊரகப் பகுதியில் நூதன முறையில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். அதன் அடிப்படையில், நரேந்திர மோடி பெயரில் நகைக்கடை, சலூன் கடை, டீக் கடை, பலசரக்குக் கடைகள் துவக்கப்படுகின்றன.
கீரைத்துறை, செல்லூர், பச்சரிக்காரத் தெரு, ஆரப்பாளையம் ஆகிய பகுதிகளில் மோடி பெயரில் கடைகள் திறக்கப்படுகின்றன. படிப்படியாக வரும் நாள்களில் ஊரகப் பகுதிகளில் ஊர் ஊருக்கு மோடி பெயரில் கடைகள் திறக்கப்படும் என்றும், அதன் மூலம் நரேந்திர மோடியின் சாதனை, பாஜகவின் தேர்தல் பிரச்சார நோட்டீஸ்கள் விநியோகிக்கப்படவுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.