அடக்கம் செய்ய பணமில்லை... மகன் உடலை மருத்துவமனைக்கு தானமாக வழங்கிய ஏழைத் தாய்
மதுரை: மூளைக் காய்ச்சலால் மரணமடைந்த மகனின் உடலை அடக்கம் செய்ய போதிய பணம் இல்லாததால், அதனை மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தானம் செய்துள்ளார் ஏழைத் தாய் ஒருவர்.
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் சண்முகம் என்பவரது மனைவி வனிதா. கணவரைப் பிரிந்த வனிதா தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்தபடி, தனது 16 வயது மகன் நவீன்குமாருடன் வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நவீனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டார் நவீன். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், நவீனுக்கு மூளைக் காய்ச்சல் இருந்ததை உறுதி செய்தனர். இதனால், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார் நவீன்.
ஆனால், சிகிச்சைப் பலனின்றி நவீன் கடந்த வெள்ளியன்று இரவு உயிரிழந்தார். மகனின் இறுதிச் சடங்குக்குக் கூட பணம் இல்லாமல் தவித்த வனிதா, நவீனின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து நவீனின் உடலை மருத்துவக் கல்லூரி உடற்கூறு இயல் துறையினர் பெற்றுச் சென்றனர்.
இது குறித்து தாயார் வனிதா கூறுகையில், ‘எனது மகனுக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டதால் பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தேன். கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டசபை உறுப்பினரிடமும் முறையிட்டேன். ஆனால், யாரும் கண்டு கொள்ளவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன் எனது மகன் இறந்தான். ஆனால், அடக்கம் செய்ய வழியில்லாததால் மகனின் உடலை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டேன். அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை' எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications