அன்று மரியம் பிச்சை.. இன்று சீனிவேல்.. அதிமுகவைத் துரத்தும் துயரம்
சென்னை: 2011ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக ஆட்சியமைத்தது. அப்போது புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் நாளில் அமைச்சராகப் பதவியேற்றிருந்த அதிமுகவின் மரியம் பிச்சை சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இப்போது மீண்டும் அதே போன்றதொரு துயரத்தை அதிமுக சந்தித்துள்ளது, சீனிவேல் ரூபத்தில்.
மரியம் பிச்சை எம்.எல்.ஏவாக பதவியேற்க வந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்தார். சீனிவேலும் அதேபோல எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் நாளில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பையும், தொடர்ந்து 2வது முறையாக இதேபோன்ற துயரத்தை கட்சி சந்தித்துள்ளதே என்ற வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் மரியம் பிச்சை திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கே.என்.நேருவை அவர் வீழ்த்தியிருந்தார். இதனால் அவரை அமைச்சராக்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா. அமைச்சர் பதவியை ஏற்ற மரியம் பிச்சை திருச்சி திரும்பினார். இந்த நிலையில் 2011, மே 23ம் தேதி சட்டசபை கூடி புதிய உறுப்பினர்கள் பதவியேற்பில் கலந்து கொள்வதற்காக காரில் சென்னை கிளம்பினார்.
அமைச்சருடன் அவரது நண்பர் கார்த்திகேயன், உதவியாளர் வெங்கடேசன் உள்ளிட்ட சிலரும் உடன் இருந்தனர். இவர்களது கார், பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் வந்தபோது முன்னால் போய்க் கொண்டிருந்த டிப்பர் லாரியை முந்த முயன்றதாக தெரிகிறது. அப்போது திடீரென அந்த டிப்பர் லாரி வலதுபுறமாக திரும்பியுள்ளது. இதை எதிர்பாராததால், கார், டிப்பர் லாரி மீது பலமாக மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து போனார் மரியம் பிச்சை. அவருடன் இருந்தவர்களில் 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. ஆனால் டிரைவர் ஆனந்தனுக்கு ஒரு காயமும் ஏற்படவில்லை. அவர் அப்படியே உயிர் தப்பினார்.
எம்.எல்.ஏ தேர்தலில் மரியம் பிச்சை போட்டியிட்டது அதுதான் முதல் முறை. முதல் முறையே நேரு என்ற மிகப் பெரிய தலையை சாய்த்ததால் மரியம் பிச்சைக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்தார் ஜெயலலிதா. ஆனால் துரதிர்ஷ்டமும் அவர் கூடவே வந்து கூட்டிக் கொண்டு போய் விட்டது.
தற்போது 5 ஆண்டுகள் கழித்து அதே போல எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் நாளில் அதிமுகவின் சீனிவேல் மரணமடைந்திருப்பது அதிமுகவினரை அதிர வைத்துள்ளது.