களைகட்டிய 'வடக்கம்பட்டி பிரியாணி அன்னதானம்'! பல்லாயிரம் பேர் பங்கேற்பு!

மதுரை அருகே வடக்கம்பட்டியில் உள்ள முனியாண்டி சுவாமி கோவிலில் பிரியாணியை படையலிட்டு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமாக வழங்கும் திருவிழா இந்த ஆண்டும் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் ஒன்று கூடி மதுரை அருகே வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோவிலில் பிரியாணி படையலிடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

பொதுவாக கோயில்களில் சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் ஆகியவற்றையே பிரசாதமாக வழங்குவது வழக்கம். ஆனால் காரசாரமான மண் மணக்கும் பிரியாணியை பிரசாதமாக வழங்குவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆம், இந்த வினோத பிரசாதம் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கருப்பண்ணசாமி என்கிற முனியாண்டி சுவாமி கோயிலில்தான். ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் திருவிழாவில் விடிய விடிய அசைவ பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் மாசி மாத வளர்பிறையில் கொண்டாடப்படும் இந்த திருவிழா இந்த ஆண்டு கடந்த 23-ந் தேதி தொடங்கி, 3 நாட்கள் நடைபெற்றது. இந்த திருவிழா ஏன்?, எதற்காக வினோத பிரசாதம் ஏன்? இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமா வாருங்கள் பார்ப்போம்.

 பஞ்சம், வறட்சி

பஞ்சம், வறட்சி

82 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை மாவட்டம், வடக்கம்பட்டியில் வறட்சியும், பஞ்சமமும் தலைவிரித்தாடியது. அப்போது அங்கிருந்த ரெட்டி சமூகத்தினரும், நாயுடு சமூகத்தினரும் பிழைப்புத் தேடி வேறு ஊர்களுக்கு செல்ல முற்பட்டனர். அதற்காக ஆயத்தமான போது, சுப்பையா நாயுடு என்பவர் கனவில் அச்சமூகத்தினரின் குலதெய்வமான முனியாண்டி சுவாமி தோன்றினார்.

 முனியாண்டி விலாஸ் உதயம்

முனியாண்டி விலாஸ் உதயம்

அன்னம் விற்று பிழைப்பு நடத்துக என்று முனியாண்டி சுவாமி கூறியதன்பேரில் கடந்த 1935-ஆம் ஆண்டு காரைக்குடியில் முனியாண்டி சுவாமியின் பெயரை கொண்ட முனியாண்டி விலாஸ் என்ற ஹோட்டலை தொடங்கினார். அதைத் தொடர்ந்து கள்ளிக்குடியில் இரண்டாவது கடை தொடங்கப்பட்டது. இவ்வாறு உணவு விற்பனை செய்யும் ஹோட்டல் தொழில் ஜரூராக இருந்தது.

 ஆயிரக்கணக்கில் கிளைகள்

ஆயிரக்கணக்கில் கிளைகள்

பாரம்பரியமான தலப்பாக்கட்டி என்ற அடைமொழியை போன்று முனியாண்டி விலாஸ் என்ற அடைமொழியைக் கொண்டு தென் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஹோட்டல் கிளைகள் தொடங்கப்பட்டன. தற்போது தடுக்கி விழுந்த இடங்களிலெல்லாம் எத்தனையோ பிரியாணிக் கடைகள் தொடங்கியிருந்தாலும் மதுரை முனியாண்டி விலாஸ் பிரியாணி என்றாலே அதில் காரசாரமும், மண் மணக்கும் சுவையும் உள்ளதால் அந்த பிரியாணிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

 80 ஆண்டுகளாக...

80 ஆண்டுகளாக...

முனியாண்டி சுவாமியின் வாக்குக்கேற்ப தற்போது அவரை நம்பி ஹோட்டல் தொழில் நடத்தி வரும் அதன் உரிமையாளர்கள் ஆண்டுதோறும் தங்களது வாழ்வாதாரத்தைக் காக்க வழிகூறிய முனியாண்டி சுவாமிக்கு நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். அதாவது ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் வளர்பிறையில் அல்லது பௌர்ணமி தினத்தில் முனியாண்டி சுவாமிக்கு திருவிழா எடுத்து வருகின்றனர். சுமார் 80 ஆண்டுகளாக நடைபெறும் இந்த விழாவையொட்டி, தென் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுரை முனியாண்டி விலாஸ் கடைகளும் 2 நாள்கள் முதல் ஒரு வாரம் வரை மூடப்படுகிறது.

 விழா கோலம்

விழா கோலம்

இந்தாண்டு கடந்த 23-ஆம் தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெற்ற இந்த திருவிழாவில் முதல்நாளன்று மாலை நிலைமாலை அணிவித்தல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் பொதுமக்கள் திரண்டு பூ, பழம், தேங்காய், பரிவட்டம் அடங்கிய அபிஷேக தட்டுகளை ஏந்தி, நிலைமாலையை எடுத்து கொண்டு மேளதாளம் முழங்க மூன்று கிராமத்தின் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். அதன் பின்னர் கருப்பண்ணசுவாமிக்கு கிடா வெட்டப்பட்டது. இந்த திருவிழாவையொட்டி கோபாலபுரம், செங்கப்படை, மலப்பட்டி, சோளம்பட்டி, அச்சம்பட்டி ஆகிய சுற்றுப்புற கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

 120 ஆடுகள், 2,500 கிலோ அரிசி

120 ஆடுகள், 2,500 கிலோ அரிசி

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் ஒன்று திரண்டு தங்களது சொந்த செலவிலும், பொதுமக்களின் அளித்த காணிக்கையிலும் பெற்ற 120 ஆடுகள், 400 கோழிகள், 2,500 கிலோ சீரகசம்பா அரிசி ஆகியவற்றைக் கொண்டு தங்கள் கடை ஊழியர்களை ஈடுபடுத்தி பிரியாணி தயாரித்தனர். பின்னர் அவற்றை தங்கள் குலசாமியான முனியாண்டிக்கு படையலிட்டனர். பிரியாணி திருவிழாவுக்கு வெளியூர்களிலிருந்தும், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் திரளும் பக்தர்களுக்கு விடிய விடிய பிரியாணியை பிரசாதமாக வழங்கப்பட்டது. சுமார் 60 ஆயிரம் பேருக்கு இந்த பிரசாதம் வழங்கப்பட்டது.

 ரூ. 15 லட்சம் வரை செலவு

ரூ. 15 லட்சம் வரை செலவு

இதுகுறித்து சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்த மதுரை வடக்கம்பட்டி முனியாணடி விலாஸ் கடையைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் கூறுகையில், எங்கள் குலதெய்வத்துக்கு நன்றி சொல்லும் திருவிழாவாக நாங்கள் இதை நடத்தி வருகிறோம். ஆண்டுதோறும் இந்த திருவிழாவுக்கென ஒரு தொகையை அனைத்து கடையினரும் ஒதுக்கி வைப்பர். தோராயமாக, ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இந்த திருவிழாவுக்கு செலவாகிறது. மேலும் பொதுமக்களும் தங்களால் இயன்ற உதவியை செய்வர். குலதெய்வத்துகென்றாலும், தானத்தில் சிறந்தது அன்னதானம், அதை எங்கள் வாழ்வாதாரத் தொழிலான ஹோட்டல் தொழிலில் செய்வது சாத்தியமில்லை, எனவே இதுபோன்ற திருவிழா நடத்தி அன்னதானம் செய்கிறோம் என்றார் அவர்.

கடவுளிடம் நிமிடத்துக்கு நிமிடம் கோரிக்கை வைத்து வரும் மக்கள் மத்தியில் தங்கள் வாழ்வாதாரத்தையே காத்த குலசாமிக்கு முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் கடந்த 80 ஆண்டுகளாக நன்றிக் கடன் செலுத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+