ஜெ. பிறந்தநாள் கொண்டாட்டம்.. பாதுகாப்பு கேட்கிறது ஓபிஎஸ் அணி… கமிஷனரிடம் மதுசூதனன் மனு
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான மதுசூதனன் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளார். ஜெயலலிதாவின் சொந்த தொகுதியில் நாளை நலத்திட்டங்களை வழங்குகிறார் ஓபிஎஸ்.
சென்னை: அதிமுகவின் மூத்த தலைவரான மதுசூதனன் தங்கள் அணிக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சென்னை கமிஷனர் ஜார்ஜிடம் மனு கொடுத்துள்ளார். நாளை ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் என்பதால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதால் பாதுகாப்பு தேவைப்படுவதாக மதுசூதனன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நாளை ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளாகும். அவர் இறந்த பின்னர் வரும் முதல் பிறந்த தினம் இது. மேலும், ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என அதிமுக பிரிந்து நின்று சண்டை போட்டு வரும் நிலையில், தனித்தனி அணியாக ஜெயலலிதா பிறந்த தினத்தைக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஆர்.கே. நகரில் ஜெயலலிதாவின் 69வது பிறந்த தினத்தைக் கொண்டாட்ட திட்டமிட்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதனையடுத்து, தங்கள் அணிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி அதிமுகவின் மூத்த தலைவரான மதுசூதனன் சென்னை கமிஷனர் ஜார்ஜை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார். அதிமுகவின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன், சசிகலாவின் தலைமையை ஏற்க மறுத்து ஓபிஎஸ் அணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.