மகா சிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி முதல் ராமேஸ்வரம் வரை களைகட்டும் முக்கிய சிவ வழிபாட்டு தலங்கள்!
மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவ ஆலயங்களில் பிரம்மோற்சவ விழாக்கள் களைகட்டியுள்ளன. பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஆலயத்திலும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்திலும் திருவிழாக்க
ராமேஸ்வரம்: மகாசிவராத்திரி விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சிவராத்திரி விழா பல சிவ ஆலயங்களில் நாடு முழுவதும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோவிலில் மகாசிவராத்திரி விழா 16ஆம் தேதி ஞாயிறு கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 22ஆம் தேதி திருத்தேரோட்டமும் 23ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. இதேபோல ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்திலும் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 13 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நாளை மறுதினம் 16ஆம் தேதி ஞாயிறு மாலை 4 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தி அருகே கைலாசகிரி மலையில் உள்ள பக்த கண்ணப்பர் கோவிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதனையொட்டி சிவன் கோவிலில் மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோரை பல்லக்கில் வைத்தும், பிரம்மோற்சவ விழா கொடியை மேள தாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து பக்த கண்ணப்பர் கோவிலான கைலாசகிரி மலைக்குப் பக்தர்கள், ஊழியர்கள் ஊர்வலமாக கொண்டு வரப்படும். அங்கு, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க பக்த கண்ணப்பர் கோவில் கொடி மரத்தில் சிவ.. சிவ.. என்ற பக்தி கோஷம் முழங்க அர்ச்சகர்கள் கொடியேற்றுவார்கள்.
அதைத்தொடர்ந்து பக்த கண்ணப்பருக்கு அபிஷேக, ஆராதனை, சிறப்புப்பூஜைகள், நைவேத்தியம், தீபாராதனை ஆகியவை நடைபெறும். மறுநாள் மாலை 4 மணியளவில் காளஹஸ் தீஸ்வரர் சன்னதி முன்பு கொடிமரத்தில் சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கொடியேற்றப்படுகிறது. 21 ஆம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது அன்றைய தினம் ரிஷப வாகனத்தில் இறைவனும் இறைவியும் உலா வருகின்றனர்.
22ஆம் தேதி காலையில் திருத்தேரோட்டமும் இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறும். 23ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து கயிலாய கிரிவலமும் மாலையில் பல்லக்கு சேவையும் நடைபெறும்.
ராமேஸ்வரத்தில் மகாசிவராத்திரி
ராமேஸ்வரம் கோயில் சிவராத்திரி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 21ஆம் தேதி மகா சிவராத்திரி உற்சவம் நடைபெறும். இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. 6 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் சன்னதியில் காலபூஜைகள் நடைபெற்று பகல் 10 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி சன்னதி எதிரிலுள்ள நந்திகேசுவரர் மண்டபத்திற்கு எழுந்தருளினார்கள். பகல் 10 மணிக்கு மேல் இங்குள்ள தங்க கொடிமரத்தில் கோயில் குருக்களால் கொடியேற்றப்பட்டு மகா சிவராத்திரி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருள விதியுலா நடைபெறும்.
மகா சிவராத்திரி முக்கிய திருவிழா நாட்களான பிப்ரவரி 16ஆம் தேதி சுவாமி, அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல், 21ம் தேதி மகா சிவராத்திரி உற்சவம் வெள்ளித் தோரட்டம், 22ம் தேதி சுவாமி, அம்பாள் தேரோட்டம் நடைபெறும்.
பிப்ரவரி 23ஆம் தேதி மாசி அமாவாசையை முன்னிட்டு அன்று மதியம் ஒரு மணிக்கு மேல் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் அக்னிதீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்க தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.