அதிமுக இணைப்பால் மனங்கள் இணையவில்லை என்பது தொண்டர்கள் கருத்து: தம்பிதுரைக்கு மைத்ரேயன் பதிலடி
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என தாம் பதிவிட்டது தொண்டர்களின் கருத்து என்று மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என தாம் பதிவிட்டது தொண்டர்களின் கருத்து; சொந்த கருத்து அல்ல என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் இணைந்தது. அப்போது ஓபிஎஸ் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். எனினும் அப்பதவியில் அவர் தனித்து இயங்க முடியவில்லை என்ற கருத்து பரவலாக இருந்தது. மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி ஓபிஎஸ்ஸுக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஒதுக்கப்பட்டது.
மேலும் தான் கையெழுத்து போடும் கோப்புகளை முதல்வர் பார்வையிட்ட பிறகே அது அதிகாரிகளிடம் செல்வதாகவும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு ஒன்றும் வித்தியாசம் இல்லை என ஓபிஎஸ் அதிருப்தியில் இருப்பது போன்ற பல்வேறு கருத்துகள் அடிப்பட்டன. இதனால் ஓபிஎஸ் அணியினர் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்பட்டது.
வழக்கு நிலுவையில்...
அதிமுக இணைந்தவுடன் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்கக் கோரி இரு அணிகளும் இணைந்தே தேர்தல் ஆணையத்தை நாடின. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மைத்ரேயன் நேற்று பதிவிட்டிருந்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மனங்கள்....
ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. தனது பேஸ்புக் பக்கத்தில், அதிமுக அணிகள் இணைந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் மனங்கள் இணையவில்லை என்பது போன்ற ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒற்றுமையாக உள்ளோம்
இதுகுறித்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூறுகையில், இரு அணிகளும் இணைந்த பிறகு நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை என்று தெரிவித்தனர். மேலும் தம்பிதுரை கூறுகையில், மனங்கள் இணையவில்லை என்பது மைத்ரேயனின் சொந்த கருத்து. அதிமுகவின் இரு அணிகளும் ஒற்றுமையாகதான் உள்ளன என்றார்.
சொந்த கருத்து அல்ல
தம்பிதுரையின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக மைத்ரேயன் மீண்டும் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் நேற்று நான் எனது முக நூல் பக்கத்தில் செய்த பதிவு குறித்து திரு. தம்பிதுரை அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். மைத்ரேயனின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்று தம்பிதுரை கூறியுள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. பெரும்பாலான கழக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத் தான் நான் எதிரொலித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.