17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி!
சென்னை: அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளரான கமலக்கண்ணன் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் ஐக்கியமாகி இருக்கிறார். தமிழ்நாட்டில் போக்குவரத்து, டாஸ்மாக், மின்துறை உள்ளிட்ட 17 முக்கிய துறைகளில் அண்ணா தொழிற்சங்கம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இதன் மூலமாக அதிமுகவின் மிக முக்கிய கட்டமைப்பை தவெக கைப்பற்றிவிட்டதாக பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் அரங்கேறி வருகிறது. அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்களான இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் உள்ளிட்ட 4 பேரும் தவெகவில் இணைந்தனர். அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் மாவட்ட அளவில் அமமுக மற்றும் அதிமுகவினர் பலரும் தவெக பக்கம் சாய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளரான கமலக்கண்ணன் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் ஐக்கியமாகி இருக்கிறார். இது அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறி இருக்கிறது.
ஏனென்றால் ஸ்ட்ரைக் போன்ற நேரங்களில் தொழிற்சங்கங்கள் முக்கியப் பங்கு வகிக்கும். திமுக தொழிற்சங்கம் சார்பாக ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டால், அதிமுக தொழிற்சங்கம் எதிர்ப்பு தெரிவித்து பணியாற்றும். அதேபோல் தொழிலாளர்களை ஒரு குடைக்கு கீழ் கொண்டு வர தொழிற்சங்கங்கள் மிகப்பெரிய கட்டமைப்பாக இருந்து வருகிறது.
இப்படியான சூழலில் தமிழ்நாட்டில் போக்குவரத்து, டாஸ்மாக், மின்துறை உள்ளிட்ட 17 முக்கிய துறைகளில் அண்ணா தொழிற்சங்கம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இந்த தொழிற்சங்கத்தில் 5.42 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதிமுகவின் மிகப்பெரிய கட்டமைப்பாக இருந்த தொழிற்சங்கம், அப்படியே தவெகவில் ஐக்கியமாகி இருக்கிறது.
கமலக்கண்ணனுக்கு தனிப்பட்ட செல்வாக்கும் அதிகம் இருக்கிறது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக தவெக கட்டமைப்பு ரீதியாக வலுவாக இல்லை. ஆனாலும் மக்கள் அதிகளவில் வாக்களித்தனர். ஆனால் தேர்தல் வெற்றிக்கு பின் தவெகவை கட்டமைப்பு ரீதியாக வலுப்படுத்த விஜய் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே அதிமுகவின் ஒவ்வொரு பிரிவையும் தவெகவில் இணைக்க ஒப்புதல் கொடுத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கூட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், அதிமுகவின் 90% பேர் தவெகவில் இணைவார்கள் என்று பேசி இருக்கிறார். தற்போது அண்ணா தொழிற்சங்கத்தை தவெகவில் இணைத்துள்ள சூழலில், தவெக கட்சியிலும் தொழிற்சங்க கட்டமைப்பு மேம்படுத்த இது உதவிகரமாக இருக்கும். இதனால் தமிழ்நாட்டில் தவெக தவிர்க்க முடியாத சக்தியாக மாறி வருவதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications