தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த எப்.ஐ.ஆர் பதிவில் தவறான பெயர்.. அதிகாரி பரபரப்பு புகார்
துப்பாக்கி சூடு குறித்த எப்.ஐ.ஆர் பதிவில் பொய்யான பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி: துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போடப்பட்ட தென்பாகம் போலீசாரின் எப்ஐஆரில் தவறானபெயர் குறிப்பிட்டிருப்பதாக அதிகாரி அளித்த புகாரினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு அசம்பாவித சம்பவங்கள் தொடர்பாக வடபாகம், சிப்காட், தென்பாகம் போலீசார் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் தென்பாகம் போலீசார், திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் புகார் கொடுத்ததாக வழக்கினை பதிவு செய்துள்ளனர்.

ஆனால் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலராக கண்ணன் என்பவர் பணியாற்றுவதாகவும், கோபால் ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலகராக பணியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தன்னுடைய பெயரை போலீசார் தவறுதலாக பயன்படுத்திவிட்டதாக கூறி கோபால், உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார்.
அதில், 'துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றபோது, தூத்துக்குடி சப்-கலெக்டர் உத்தரவின் பேரில் நிர்வாக நடுவராக 3-வது மைல் பகுதியில் தான் பணியிலிருந்ததால், இது தொடர்பாக தான் எந்த புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார், மேலும் முன்பு தான் பணிபுரிந்த திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பதவியை குறிப்பிட்டு தென்பாகம் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தானும், தனது குடும்பத்தாரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதால் இதுகுறித்து உண்மை தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோபால் கேட்டுக் கொண்டிருந்தார்.
கோபால் எழுதிய இந்த கடிதம் காவல்துறை மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இதையடுத்து, வட்ட வழங்கல் அலுவலர் கோபாலுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று ஒரு மனு அளித்தனர். அதில், தூத்துக்குடியில் ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் என்பவர் புகார் அளித்ததாகவும், அதன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளதாக தெரிவித்தனர்.
ஆனால் கோபால் தற்போது ஸ்ரீவைகுண்டத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், தாம் ஏதும் புகார் அளிக்கவில்லை எனவும் அவர் மறுத்துள்ளதால், இதுகுறித்து ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக அச்சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தென்பாகம் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் பொய்யான பெயரை குறிப்பிட்டிருப்பதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications