கண்ணகி கோவில் திருவிழா!... ஜெ. மீண்டும் முதல்வராக பாதையாத்திரை போன தங்கத்தமிழ் செல்வன்
தேனி: மங்கல தேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஏக கெடுபிடிகள் இருந்தாலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி ஆண்டிபட்டி எம்.எல்.ஏ தங்க.தமிழ்செல்வன், 7 கி.மீ மலைப்பாதையில் பாதை யாத்திரையாக சென்று, சிறப்பு பூஜை நடத்தியுள்ளதுதான் பரபரப்பாக பேசப்படுகிறது.
தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பனியன்குடி மலை உச்சியில், மங்கல தேவி கண்ணகி கோவில் உள்ளது. தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள இக்கோவில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பக்தர்கள் பதையாத்திரை
இந்த ஆண்டு கடந்த திங்கட்கிழமை சித்ரா பவுர்ணமி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இரு மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.குமுளி பேருந்து நிலையத்தில் பக்தர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு, ஜீப்களில் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். சில பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு சென்றனர்.

சாரை சாரையாக
தமிழக பகுதிகளிலிருந்து பளியங்குடி வழியாக வனப்பகுதியில் நடந்தும் , தேக்கடியிலிருந்து நடந்தும், ஜீப் வழியாகவும் காலை 6.30 மணி முதலே
பக்தர்கள் வரத்தொடங்கினர். தேக்கடியிலிருந்து செல்லும் பெரும்பாலான ஜீப்களில் முந்தைய நாள் பெய்த மழையில், பாதைகளில் செல்ல முடியாமல் சகதியில் சிக்கின. இதனால் ஜீப்பில் சென்ற பெரும்பாலான பயணிகளும் இறக்கி விடப்பட்டு நடந்தே சென்றனர்

கண்ணகியின் அருள்
திருவிழாவை முன்னிட்டு சர்வ அலங்காரத்தில் மாம்பழ நிற பட்டுப்புடவையில் மங்களதேவி கண்ணகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தமிழகத்தின் சார்பில் பூசாரி சபரிநாதனும், கேரளத்தின் சார்பில் கே.என்.சீனிவாசன்கோட்டியும் அர்ச்சனை செய்தனர். கோயில் வளாகத்தில் உள்ள சிவன், துர்க்கை, கணபதி கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதிமுக எம்.எல்.ஏ வழிபாடு
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டியும், வழக்குகளில் இருந்து விடுபடவும், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ தங்க.தமிழ்செல்வன், கூடலூர் வனச்சரகம் பளியன்குடியிலிருந்து 7 கி.மீ மலைப்பாதையில் பாதை யாத்திரையாக சென்று, சிறப்பு பூஜை நடத்தினார்.

பொங்கல் வைத்து வழிபாடு
மலர் வழிபாடு, மங்கல இசை, பொங்கல் வைத்தல், பிரசாதம் வழங்குதல், பால்குடம் எடுத்தல், அம்மனுக்கு பூஜித்த மங்கல நாண், வளையல் வழங்கல், மணிமேகலையின் அட்சய பாத்திரத்தில் உணவு வழங்குதல், அவல் வழங்குதல், திருவிளக்கு வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு பூமாரி பூஜையுடன் விழா நிறைவு பெற்றது.
திருவிழா இனிதே நிறைவேறினாலும், சிதிலமடைந்த கண்ணகி கோவிலை எப்போது புதுப்பிக்கப் போகிறார்கள்? தமிழகப் பகுதிகளிலிருந்து சென்று வர சாலை வசதி மற்றும் வாகன வசதி மற்றும் எப்போது நிறைவேறும் என்ற ஏக்கத்துடனேயே இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications