ஜல்லிக்கட்டு தடையை நீக்காவிட்டால் போராட்டம் தொடரும்... மக்கள் நலக்கூட்டியக்கம் அறிவிப்பு
மதுரை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்காவிட்டால் தங்களது போராட்டம் தொடரும் என மக்கள் நலக்கூட்டியக்கம் அறிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தின் அடையாளமாக நடத்தி வந்த ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு முறையான நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழர்களின் வாழ்வோடு ஜல்லிக்கட்டு இணைந்தது என்பதை வலியுறுத்தியும் மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் இன்று மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மதுரை, ஓபுலா படித்துறை அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். இதில், மக்கள் நலக் கூட்டியக்கத் தலைவர்களும், தொண்டர்களும் பங்கேற்றனர்.
அப்போது பேசிய வைகோ, ‘ஜல்லிக்கட்டு தடையை நீக்க தமிழக எம்.பிக்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய, மாநில அரசுகளே ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு காரணம். ஜல்லிக்கட்டுக்கு தடை நீடித்தால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்' என்றார்.
இதேபோல், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தராத மத்திய, மாநில அரசை கண்டிப்பதாக தெரிவித்த திருமாவளவன் மத்திய, மாநில அரசுகளின் செயல் மக்களை ஏமாற்றுவதாக உள்ளதாகவும் புகார் கூறினார்.
இது தொடர்பாக மக்கள் நலக்கூட்டியக்கத் தலைவர்களில் ஒருவரான முத்தரசன் கூறுகையில், ‘ஆந்திராவில் போட்டி நடைபெறும் நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இல்லை என்பதா? காளைகளை அவிழ்த்துவிட்டால் 144 தடை உத்தரவை போல் போலீஸ் செயல்படுகிறது' என்றார்.












Click it and Unblock the Notifications