தாலிபான் தடைகளை தகர்த்து பள்ளி படிப்பை முடித்தார் மலாலா! அதிரடியாக அடுத்து என்ன செய்கிறார் தெரியுமா?
பள்ளிப்படிப்பை முடித்து விட்டு டுவிட்டர் மூலம் பெண் கல்வி குறித்த பரப்புரையை தொடங்கியுள்ள மலாலாவை 21 மணி நேரத்தில் 4.4 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
சென்னை : தாலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியும் தொடர்ந்து கல்வி கற்கச்சென்றதின் மூலம் உலகளவில் பிரபலமான மலாலா தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். அதே நேரம் டிவிட்டரில் கணக்கை தொடங்கி அதில் புதிய பயணத்தையும் தொடங்கியுள்ளார்.
பாகிஸ்தானில் குழந்தைகள் கல்விக்கு குரல் கொடுத்த மலாலா மீது தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்குப்பிறகு அவர் அமைதியாக இருந்துவிடுவார் என்று கருதிய தீவிரவாதிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. போரால் பாதிக்கப்பட்ட, முழுமையான அமைதியான சூழல் கிடைக்காத குழந்தைகளின் உரிமை, கல்வி குறித்து போராட்டை முன்னெடுத்து உலகளவில் பிரபலமானார் மலாலா.
தீவிரவாத தாக்குதலில் உயிர்பிழைத்த மலாலா, மீண்டும் தாக்கப்படலாம் என்ற எச்சரிக்கையால், லண்டனில் உள்ள பள்ளியொன்றில் தங்கி படித்து வந்தார். 19 வயதான மலாலா பள்ளிப்படிப்பை அண்மையில் முடிந்துவிட்ட சூழலில் உயர்கல்வி படிக்க மலாலாவின் குடும்பத்தினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்த நிலையில், டுவிட்டர் பக்கத்தில் கணக்கை தொடங்கிய மலாலாவுக்கு எதிர்பாராதளவிற்கு வரவேற்பு கிடைத்துவருகிறது.
|
4.4 லட்சம் ஃபாலோயர்கள்
மலாலாவின் டுவிட்டர் கணக்கிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ என உலகம் முழுவதிலிருந்தும் உள்ள முக்கிய தலைவர்கள் உட்பட 4.4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பக்கம் தொடங்கப்பட்ட 21 மணிநேரத்தில் இந்தியாவிலும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் உள்ளிட்டவர்களும் மலாலாவை டுவிட்டரில் பின் தொடர்ந்து வருகின்றனர்.
|
தொடரும் பிரச்சாரம்
தனது உயர்கல்வி படிப்பு முடிந்துவிட்டது என்றாலும், எதிர்காலத்தை நினைத்து உற்சாகம் அடைவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார் மலாலா. அதேபோல் டுவிட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்துள்ளார் மலாலா. 12 வயது நிரம்பிய பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பரப்புரையையும், நிதி திரட்டும் பணியையும் தொடங்கியுள்ளார். தனது உலகளாவிய போராட்டம் தொடரும் என்று அரைகூவல் விடுத்துள்ளார் மலாலா.
|
நோபல் பரிசு
அடுத்த கட்டமாக, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்கா, லத்தின் அமெரிக்கா நாடுகளுக்கு பயணம் செய்து பெண் குழந்தைகளை சந்திக்கவுள்ளதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 1997 ஆம் ஆண்டு பிறந்த மலாலா, தனது சிறப்பான சேவைக்காக 2014 ஆம் ஆண்டு கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவின் சமூக சேவகர் கைலாஷ் சத்தியார்த்தியுடன் பகிர்ந்துகொண்டார்.
|
நல்ல வளர்ப்பு
மலாலா மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்தாலும் இன்னும் அவர் மனதில் மறையாத வடுவாக அந்த சம்பவம் இருக்கிறது. ஆனால், அவரது பெற்றோர்களின் நல்வளர்ப்பு மலாலாவை உலகப்புகழ் பெறச்செய்திருக்கிறது என்றால் மிகையல்ல.