மத்திய அரசு நேரடியாக மோதட்டும்.. சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: ரெய்டு பற்றி ப.சிதம்பரம் காட்டம்
சென்னை: அரசு மோத வேண்டுமானால் என்னிடம் நேரடியாக மோதட்டும், அரசியலில் தொடர்பில்லாத எனது மகன்களை தொல்லை செய்ய வேண்டாம் என்று மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அவரது மகனின் நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய நிலையில் சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: இந்த அரசு என்னை இலக்காக கொண்டிருந்தால், அதை அவர்கள் நேரடியாக செய்யட்டும். அதைவிட்டு எநது மகனின் நண்பர்களுக்கு தொல்லை தர வேண்டாம். அவர்களுக்கு அரசியலில் எந்த தொடர்பும் கிடையாது.
என்மீதும், எனது குடும்பம் மீதும் மத்திய அரசு சேற்றை வாரி இறைக்கிறது. அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். எங்கள் குடும்ப நிறுவனங்கள் சட்டப்படி இயங்கிவருகின்றன. தேவையில்லாமல் எனது குடும்பத்தையும், நிறுவனங்களையும், வழக்குகளில் இழுத்துவிடுவதை கண்டிக்கிறேன்.
அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரால், வருவாய் துறையில் அவருக்கு இருக்கும் பகையை தீர்த்துக்கொள்ள இந்த ரெய்டு நடந்துள்ளது. மத்திய அரசின் விருப்பத்தை அந்த அதிகாரி தனது தனிப்பட்ட ஆசையோடு நிறைவேற்றுகிறார்.
நான் அமைச்சராக இருந்தபோது, சட்டத்திற்கு விரோதமாக உதவி செய்ய கேட்டார். நான் மறுத்ததால் அந்த அதிகாரி ஆட்சி மாற்றத்தை பயன்படுத்தி பழிவாங்குகிறார். இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.