நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் சுருட்டி, மைனர் பெண்ணுடன் உல்லாசம்.. மடக்கிப் பிடித்த மக்கள்
உடன்குடி: நிதி நிறுவனம் நடத்தி அதில் வந்த பணத்தில் மைனர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த தேரியூரை சேர்ந்தவர் சுரேஷ். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்ததால் உறவினர் வீட்டில் வளர்ந்து வந்த இவர் உடன்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சுரேஷ்க்கு தனது சொந்த ஊரை சேர்ந்த மைனர் பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. தீவிரமாக காதலித்து வந்த இருவரும் ஊர் சுற்றி பார்க்க ஆசைப்பட்டனர். இதற்காக தான் வேலை பார்த்து வந்த நிதி நிறுவனத்தில் 5 லட்சத்தை சுருட்டிய சுரேஷ் தனது காதலியுடன் சுற்றுலா புறப்பட்டார். கோவை, சென்னை, பெங்களூரு, மும்பை, கோவா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்ற இருவரும் நண்பரை பார்க்கும் பொருட்டு ஊர் திரும்பினர்.
இதற்கிடையே பணம் திருட்டு போனது குறித்து தெரிந்த நிதி நிறுவன உரிமையாளர் குலசேகரப்பட்டிணம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த குலசேகரப்பட்டிணம் போலீசார் தேரியூர் சென்று விசாரித்தனர்.
அப்போது பொதுமக்கள் இருவரையும் பிடித்து போலீசாரிடம் ஓப்படைத்தனர். சுற்றுலா சென்றதால் செலவழித்தது போக இருந்த ரூ.4 லட்சத்தை கைப்பற்றிய போலீசார் சுரேஷை கைது செய்தனர். மைனர் பெண்ணை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.