சென்னை: காதலித்து மணந்த 3 மனைவிகளை விபச்சாரத்தில் தள்ளிய கணவன்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் ராஜன் (26). சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வந்த ராஜனுக்கு குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசை வந்துள்ளது.
அதன்படி, அழகிய இளம்பெண்களுக்கு காதல் வலை வீசி அவர்களை வீட்டை விட்டு வெளியே வரச் செய்து திருமணம் செய்து, பின்னர் அவர்களுடன் சில காலம் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து விட்டு அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதை தனது தொழிலாக மாற்றிக் கொண்டுள்ளார் ராஜன்.
ஒவ்வொரு முறை பெண்களை ஏமாற்றும் போதும் தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார் ராஜன். எனவே, ராஜனுக்கு ராமராஜன், மணி என்ற வேறு பெயர்களும் உண்டு. ஏற்கனவே இவர் மீது மூன்று விபசார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் ராஜன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
காதல் மன்னன் ராஜனை கைது செய்து, அவரது காதல் திருமண மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி கமிஷனர் ஜார்ஜ், விபசார தடுப்பு போலீசாருக்கு உத்தரவிட்டதின் பேரில், கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கணபதி ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான தனிப்படை போலீசார், ராஜனை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சென்னை சாலிகிராமம் முத்தமிழ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ராஜன் ரகசியமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு, ராஜன் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை போலீசார் சுற்றிவளைத்தனர். ராஜன் தங்கி இருந்த வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்து, அவரை மடக்கிப்பிடித்தனர்.
அப்போது ராஜனை காதலித்து மணந்து பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 2 இளம்பெண்களும் குறிப்பிட்ட வீட்டில் இருந்து மீட்கப்பட்டனர். இவர்கள் இருவர் தவிர மேலும் ஒரு பெண்ணையும் ராஜன் காதலித்து மணந்து ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. அப்பெண்ணின் நிலைமை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்கப் பட்ட அப்பெண்கள் இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். தற்போது அவர்கள் அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ராஜன் எப்போதும் தமிழ் தெரியாத ஆந்திர பெண்களையே தேர்ந்தெடுத்து, காதலித்து ஏமாற்றி தமிழகம் அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.
தற்போது கைது செய்யப் பட்டுள்ள ராஜன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.