மனைவி குளிப்பதை எட்டி பார்த்த நண்பர்.. மது குடிக்க வைத்து தீர்த்து கட்டிய கணவன்.. பரபரத்த தென்காசி
தென்காசி அருகே மனைவி குளிப்பதை எட்டி பார்த்த நண்பரை கட்டையால் அடித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மனைவி குளிப்பதை எட்டிப்பார்த்த நபரை மது குடிக்க அழைத்து சென்று கட்டையால் அடித்து கொன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த கட்டளைக் குடியிருப்பு பகுதியை சேர்ந்த நபர் ஐயப்பன். திருமணமானவர்.
ஐயப்பனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

குளிப்பதை எட்டிப்பார்த்த நண்பர்
இதனால் ஐயப்பன் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐயப்பன் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் ஒன்றாக வேலை பார்த்து வருவதால் இவர்கள் இருவரும் ஓய்வு நேரத்தில் ஒன்றாக மது அருந்தி வந்துள்ளனர். இந்த சூழலில், ஐயப்பன் தனது நண்பரின் மனைவி குளிப்பதை எட்டி பார்த்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அந்த நபர் ஐயப்பன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

கட்டையால் தாக்கியுள்ளனர்
ஐயப்பனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணிய அந்த நபர் தனது நண்பர் ஒருவரிடம் இதை சொல்லியிருக்கிறார். இருவரும் சேர்ந்து ஐயப்பனை பழி தீர்க்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஐயப்பனை வழக்கம் போல் மது அருந்த அழைத்து இருக்கிறார் அந்த நபர். மதுபோதையில் ஐயப்பன் இருந்த போது, 2 பேரும் சேர்ந்து ஐயப்பனை தலையில் கட்டையால் பலமாக அடித்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
இதில் வலி தாங்க முடியாமல் கதறிய ஐயப்பன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த நிலையில் மறுநாள் காலை ஐயப்பன் மரணம் அடைந்து கிடந்த தகவல் போலீசாருக்கு சென்றது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் ஐயப்பனை அவரது நண்பரே மது அருந்த அழைத்து வந்து கொலை செய்த சம்பவம் தெரியவந்தது.

2 பேர் கைது
இதையடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஐயப்பனை கொன்றுவிட்டு தலைமறைவான இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மனைவி குளிப்பதை எட்டிப்பார்த்ததால், மது குடிக்க வைத்து நண்பரே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications