மோடி, நிதீஷ்குமாரின் வெற்றிக்கு பின்னால் இருந்த டிஜிட்டல் வல்லுநரை வளைத்தது திமுக!
சென்னை: மோடி, நிதீஷ்குமாரை பதவியில் அமர்த்தி வைத்து அழகு பார்த்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் கிஷோர் குமாரை திமுக தனது டிஜிட்டல் பிரச்சாரத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எந்த ஒரு முக்கிய ஊடகங்கள் துணையின்றி, சோஷியல் மீடியாக்கள் துணையோடு, பிரதமரானவர் என்று நரேந்திர மோடி பற்றி கூறப்படுவதுண்டு. அந்த டிஜிட்டல் புரட்சிக்கு வித்திட்ட டீமுக்கு தலைவர், வேறுயாருமல்ல, பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோர்தான் அவர்.
37 வயதாகும், பிரசாந்த் கிஷோர், ஐ.நாவில் சுகாதார நிபுணராகப் பணியாற்றியவர். 2011ல் இளம் தொழில்நுட்ப நிபுணர்களுடன் சேர்ந்து இந்திய மக்களின் ஆக்ஷன் கமிட்டி (IPAC) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

மோடி பக்கம்
இவரது திறமையை அறிந்து, 2012ம் ஆண்டு குஜராத் சட்டசபைத் தேர்தலிலும், 2014 மக்களவை தேர்தலிலும் நரேந்திர மோடி இவரை தன்பக்கம் இழுத்து, தேர்தல் வியூகங்களை வகுக்கச் செய்தார். அதற்கு கைமேல் பலன்களும் கிடைத்தன.

முதல்முறை
தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆட்சியையே பிடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். அதுவரை, எந்த அரசியல் கட்சியும், இப்படியொரு ஒரு பிரசாரத்தைச் செய்ததில்லை என்பதால், மோடியின் வெற்றி கிஷோர் மீதான டிமாண்ட்டை பல மடங்கு அதிகரித்துவிட்டது.

நிதீஷ்குமார்
இந்நிலையில்தான், மோடியிடமிருந்து திடீரென விலகிய, கிஷோர், நிதீஷ்குமார் கூட்டணிக்காக திட்டமிடலை கொடுத்து வெற்றிபெறச் செய்துள்ளார். 145 சீட்டுகளை வென்று காட்டுவேன் என்று அவர் கூறிதான் அந்த அசைன்மென்ட்டையே ஏற்றுள்ளார். அதை செய்தும் காட்டியுள்ளார்.

அனைத்து ஐடியாக்களும்
300 பேர் கொண்ட டீமுடன் பீகார் தேர்தல் உத்திகளை வகுத்து நிதிஷ்குமாரை மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ளார். தேர்தல் நேரத்தில், நிதிஷ்குமார் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை கூட நிர்ணயித்துள்ளார் கிஷோர்.

திமுக அணுகல்
இந்நிலையில், திமுக தரப்பு, அவசர, அவசரமாக கிஷோரை சந்தித்து, தேர்தல் பிரச்சார உதவி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக பொருளாளர், ஸ்டாலின் பிரசாரத்தின் பின்னால் இருந்து வடிவமைப்பவர் அவரது மருமகன் சபரீசன் என்று கூறப்படுகிறது. சபரீசனே நேரடியாக கிஷோரை சமீபத்தில் சந்தித்திருக்கிறார் என தகவல்கள் கூறுகின்றன.

பெரிய கட்டணம்
இருதரப்பின் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இறுதியாக பிரசாந்த்துடன் பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப ஊடகங்களுக்கான செலவு மற்றும் பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்திற்கான கட்டணமும் பெரிய அளவில் பேசி முடிக்கப்பட்டு விட்டது என்று கூறப்படுகிறது. இவரின் திட்டம் ஸ்டாலினை முன்னிறுத்துவதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதிமுகவும் கோதாவில்
ஏற்கனவே ‘விஷன் 234' என அ.தி.மு.கவும் டிஜிட்டல் களத்துக்குள் புகுந்துவிட்டது. ‘ஒளிரும் நிகழ்காலம்! மிளிரும் வருங்காலம்', ‘தழைக்கட்டும் தமிழகம்! செழிக்கட்டும் தமிழர்கள்', ‘தொடரட்டும் மேம்பாடு! ஜொலிக்கட்டும் தமிழ்நாடு' என அதிமுக பிரச்சாரங்களை தொடங்கிவிட்டது.

ஜெயிக்கப்போவது யாரு?
தமிழகத்தில் தகவல் தொழிநுட்பப் பிரிவை முதலில் ஆரம்பித்தது அ.தி.மு.க,தான். இந்தப் பிரசாரத்திற்கு பின்னால் இருப்பவர் ஐ.டி. பிரிவு செயலாளரும், தகவல் தொழில்நுட்ப வல்லுநருமான சுவாமிநாதன். இவர் துறைசார்ந்த வல்லுநர் என்பதோடு அ.தி.மு.க,வின் உறுப்பினரும் ஆவார். டிஜிட்டல் உலகில் ஜொலிக்க போவது, பிரசாந்த் கிஷோரா அல்லது சுவாமிநாதனா என்ற கேள்விக்கு, தமிழக சட்டசபை தேர்தல் முடிவு பதில் சொல்லிவிடும்.












Click it and Unblock the Notifications