பூக் கடை வியாபாரியின் உயிரைக் குடித்த கந்துவட்டி
நெல்லை: நெல்லை மாவட்டத்தில், கந்து வட்டி தொல்லையால் பூ வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை டவுன் அனவரவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார். கடன் தொல்லை காரணமாக நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
நெல்லை டவுன் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, வையாபுரி நகரை சேர்ந்தவர் கணேசன் என்பவரிடம் சுப்பிரமணியன் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.இதற்காக தினமும் ரூ.300 வட்டி செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவரால் வட்டி கட்ட முடியவில்லை. இதனால் கணேசன் சுப்பிரமணியனை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மனம் உடைந்த சுப்பிரமணியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்திய கணேசனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.