மதுரை: கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த வாலிபர் கவலைக்கிடம்
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த வாலிபரின் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தீக்குளித்த வாலிபரின் பெயர் மாரியப்பன் வயது 36. இவர் மதுரை செல்லூர் பாக்கிய நாதபுரம் நாராயணகுரு வீதியில் வசித்து வருகிறார். இன்று காலை 11 மணி அளவில் மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தார்.
கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கொடுக்க ஏராளமானோர் அங்கு நின்று கொண்டிருந்தனர். அப்போது மாரியப்பன் அங்குள்ள நூலகத்தின் நுழைவு வாயில் அருகே நின்று கொண்டிருந்தார். திடீரென்று அவர், மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றினார்.
பின்னர் அவர் உடலில் தீ வைத்தார். தீ பிடித்ததும் அவர் கூச்சல் போட்டுக் கொண்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஓடினார். வாலிபர் ஒருவர் உடலில் எரியும் தீயுடன் ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு நின்ற பொதுமக்களும், பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும் மாரியப்பனை பிடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அவரது உடல் கருகியது. உடனே அவரை மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனைக்குத் தூக்கி சென்றனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாரியப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், குடும்ப பிரச்சினை காரணமாக கலெக்டரை சந்திக்க வந்ததாகவும், அப்போது மனவேதனை அடைந்து உடலில் தீ வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications