குறுக்காலே புகுந்த நாய்.. பைக்கில் சென்றவர் தடுமாறி விழுந்து பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நாய் குறுக்கே சென்றதால் பைக்கில் சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அடுத்த ஆலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல். இவர் இரவு எட்டு மணிக்கு ராயக்கோட்டை - கிருஷ்ணகிரி சாலையில் ஆலப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகில் தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென சாலையின் குறுக்கே ஓடி வந்த நாய் மீது எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில், கதிர்வேல் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதைக்கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள், கதிர்வேலை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆயினும், சிகிச்சை பலனின்றி கதிர்வேல் இறந்தார். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.