காதல் மனைவியை மீட்டு தருமாறு தொழிலாளி கொடுத்த மனுவால் பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் காதல் மனைவியை மீட்டுத்தர வேண்டும் என சாத்தான்குளத்தை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி கலெக்டரிடம் மனு அளித்தார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளம் அருகே கீழக்கருங்கடல் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மணிராஜ். இவர் துத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், "நான் ஓட்டல் தொழிலாளி. நானும் எனது உறவினரான இளங்கோ மகள் மீனா சுசிலாவும், கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தோம். 22.7.2015 அன்று மீனா என்னைத் தேடி திருவனந்தபுரத்தில் நான் வேலை பார்த்த ஓட்டலுக்கே வந்துவிட்டார்.

வீட்டில் தனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து விட்டதால், என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார். அதனால் நானும் மீனாவும், புனலூரில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் மீனாவின் தாயார் மல்லிகா, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மீனாவை நான் கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்தார். இதன்பேரில் நானும், மீனாவும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 27.7.2015 அன்று ஆஜரானோம்.போலீஸ் விசாரணையில் மீனா, விருப்பத்தின் பேரிலேயே என்னை திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.
அதற்கு மல்லிகா, தற்போது ஆடி மாதமாக இருப்பதால் முறைப்படி திருமணம் செய்ய முடியாது என்றும், ஆவணி மாதத்தில் திருமணம் செய்து வைப்பதாக காவல் நிலையத்தில் எழுதி கொடுத்து, திருச்செந்தூர் ஜீவா நகரில் வசித்து வரும் மீனாவின் அத்தை லெட்சுமி வீட்டிற்கு அழைத்து சென்று வீ்ட்டு காவலில் வைத்ததாக தெரிகிறது.
அத்தை வீட்டிற்கு சென்ற மீனா ஓரிரு நாட்கள் மட்டுமே என்னுடன் தொலைபேசியில் பேசினார். அதன்பின் அவள் தொடர்பு கொள்ளவில்லை. நான் முயன்ற போதும் செல்போனில் பேச முடியவில்லை. இதையடுத்து நான் மீனாவை சந்திக்க திருச்செந்தூர் சென்றபோது, மீனாவின் அத்தை லெட்சுமியும், அவரது கணவர் செந்திலும் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி விரட்டி விட்டனர்.
தற்போது எனது மனைவி மீனாவை மும்பைக்கு அழைத்துச் சென்று ஒழுங்காக உணவு கொடுக்காமலும், யாருடன் பேசாமலும் வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக தெரிகிறது. அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. இதுகுறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் புறக்கணித்து வருகிறார். எனவே தாங்கள் எனது மனைவியை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications