மாட்டுவண்டிக்கு லஞ்சம் கேட்ட நபர் கைது – போலீசாருக்காக வாங்கியதாக வாக்குமூலம்
ஈரோடு: ஈரோட்டில், மாட்டு வண்டிக்காரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்கிய நபர் ஒருவர் போலீஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு நகரிலுள்ள கருங்கல்பாளையம் "செக்போஸ்ட்" பகுதியில், நேற்று மதியம் ஈரோடு எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி ஆய்வில் ஈடுபட்டார்.
அவ்வழியாக பள்ளிபாளையம், மற்றும் சேலம் பகுதியிலிருந்து வந்துகொண்டிருந்த மாட்டு வண்டிகள், மினி டோர் ஆட்டோகள், டெம்போ உள்ளிட்ட வாகனங்களை செக்போஸ்ட் அருகே வழிமறித்து நிறுத்தும் நபர், ஒவ்வொரு வண்டியின் ஒட்டுனரிடமும் தலா, 20 ரூபாய் வசூலித்துக்கொண்டு வண்டியை அனுமதித்துக்கொண்டு இருந்தார்.
இந்த காட்சியை நீண்ட நேரம் நின்று கண்காணித்த எஸ்.பி.சிபிசக்ரவர்த்தி, அந்த நபரை பிடித்துக்கொண்டுவந்து விசாரணை நடத்தியுள்ளார்.செக்போஸ்ட்டில் பணியிலிருக்கும் போலீஸார் கூறியதால் தான் வசூலில் ஈடுபட்டதாக அந்த நபர் சொல்லியுள்ளார். "செக்போஸ்ட்" பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., செல்லமுத்து, ஏட்டு வடிவேல் ஆகியோரிடம், எஸ்.பி., விசாரித்தார்.
'ஐயா சத்தியமா எங்களுக்கு எதுவும் தெரியாது' என்ற அவர்கள் பதிலில், திருப்தியடையாத எஸ்.பி, சம்மந்தப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தி, அறிக்கையை தாக்கல் செய்ய, டவுன் டி.எஸ்.பி., பெரியய்யாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, போலீஸார் இருவரிடமும், நேற்று மாலை டவுன் டி.எஸ்.பி., விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை, எஸ்.பி., பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி, "சம்மந்தப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்க, டவுன் டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட்டுள்ளேன். அவரது அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.












Click it and Unblock the Notifications