ஏமாற்றிய நிலத்தை கேட்ட புது மாப்பிள்ளை.. போதையில் போட்டுத் தள்ளிய மந்திரவாதி!
மாமல்லபுரம்: ஏமாற்றிய நிலத்தை கேட்கச் சென்ற புதுமாப்பிள்ளையை துண்டுத் துண்டாக வெட்டி பூஜை செய்து பாலாற்றில் புதைத்த மந்திரவாதி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாமல்லபுரம் அருகே வெண்புருஷம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதான கார்த்திக். இவர், சூளேரிக்காட்டைச் சேர்ந்த ரங்கீலா என்ற பெண்ணை கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவியின் பூர்வீக சொத்தை அவரது அக்காள் ரஞ்சிதாவும் அவரது கணவர் டில்லிபாபு என்பவரும் ஏமாற்றி எடுத்துக் கொண்டதாக ரஞ்கீலா தனது கணவர் கார்த்திக்கிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, நிலத்தை ஏமாற்றி எடுத்துக் கொண்டது தொடர்பாக டில்லிபாபுவின் வீட்டிற்கு நேரில் கேட்கப் போவதாக சொல்லிவிட்டு கடந்த மாதம் 8ம் தேதி கார்த்திக் சென்றார். இதன் பிறகு கார்த்திக் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த ரங்கீலா கடந்த மாதம் 23ம் தேதி மாமல்லபுரம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே, இந்த வழக்கு தொடர்பாக அக். 25ம் தேதி கோர்ட்டில் டில்லிபாபு சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து இவரை மாமல்லபுரம் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்தன.
போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளித்த டில்லிபாபு, கார்த்திக்கை எப்படி கொலை செய்தார் என்பதையும் விளக்கி கூறியுள்ளார். மேலும், நிலம் குறித்து கேள்வி கேட்க போன கார்த்திக்கை மாமண்டூர் பாலாற்றுக்கு அழைத்துச் சென்று அங்கு துண்டுத் துண்டாக வெட்டி புதைத்தை டில்லி பாபு ஒப்பு கொண்டார். இதனைத் தொடர்ந்து, கார்த்திக்கை கொன்று புதைத்த இடத்தையும் அடையாளம் காட்டினார்.
இந்த இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட கார்த்திக்கின் சடலம் செங்கல்பட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதனையடுத்து, இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக டில்லிபாபுவிடம் விசாரித்தனர். அப்போது, மாமண்டூரைச் சேர்ந்த மந்திரவாதி 29 வயதான சுதாகர் என்பவரும் அவரது சகோதரர் வினோத்குமார் என்பவரும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதை டில்லிபாபு ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
இவர்கள் இருவரிடமும் போலீசார் செய்த விசாரணையில், புது மாப்பிள்ளை கார்த்திக் நிலம் தொடர்பான பிரச்சனையில் அதிக ஈடுபாடு காட்டுவதாகவும் இதனால் நிலம் கையை விட்டு போய்விடும் என்ற பயத்தில் மந்திரவாதியை டில்லிபாபு நண்பர்களின் உதவியோடு சந்தித்துள்ளார். அப்போது, கார்த்திக்கை நேரில் அழைத்து வந்து பூஜை செய்தால், எல்லாம் சரியாகிவிடும் என்று மந்திரவாதி கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, கார்த்திக்கிடம் பேசி வரவழைத்த டில்லிபாபு மந்திரவாதியிடம் அழைத்து வந்துள்ளார். அப்போது, அங்கு நிலப்பிரச்சனையில் தலையிடக் கூடாது என்று கார்த்திக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதற்கு கார்த்திக் ஒத்துவராததால் தீர்த்துக் கட்ட மந்திரவாதியும் டில்லிபாபுவும் முடிவு செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து கார்த்திகை பாலாற்றுக்கு அழைத்து சென்று மது அருந்த செய்துள்ளனர். கார்த்திக்கிற்கு நன்றாக போதை ஏறிய பின்னர், மந்திரவாதியும், அவரது சகோதரரும் துண்டு துண்டாக வெட்டி பூஜை செய்துள்ளனர். பின்னர் பாலாற்றின் ஒரு பக்கத்தில் புதைத்துவிட்டு சென்றுவிட்டனர் என்ற திடுக்கிடும் தகவல்களை மந்திரவாதி சுதாகர் ஒப்புக் கொண்டார்.
இதனையடுத்து, மந்திரவாதி சுதாகரும், அவரது சகோதரர் வினோத்குமாரும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.