சென்னை: மசாலா பொடியோடு தங்கப் பொடி கடத்திய பலே ஆசாமி கைது
சென்னை: சிங்கப்பூரில் இருந்து மசாலாதூளில் ஒரு கிலோ தங்கத்தை பொடியாக்கி கலந்து சென்னைக்கு கடத்தி வந்த வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு செவ்வாய்கிழமையன்று வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ராஜன்பாபு (வயது 38) என்பவர் சுற்றுலா பயணியாக சிங்கப்பூருக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பினார். இவர் மீது சுங்க இலாகாவினருக்கு சந்தேகம் ஏற்பட்டு, தனியாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பிடிபட்ட மசாலாதூள்
இவரது உடமைகளை சோதனை செய்தபோது எதுவும் சிக்கவில்லை. ஆனால் 5 டப்பாக்களில் மசாலா தூள் இருந்தது. இது என்ன என்று அதிகாரிகள் கேட்டபோது சிங்கப்பூரில் இருந்து சமையலுக்காக விலையுயர்ந்த மசாலாப்பொடி வாங்கி வருவதாக கூறினார்.
கரைந்த மசாலாபொடி
அவற்றை திறந்து பார்த்தபோது அந்த மசாலாத்தூள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒரு பக்கெட் தண்ணீருக்குள் பாக்கெட்டில் இருந்த மசாலாதூளை போட்டனர். அப்போது மசாலா தூள் கரைந்துவிட்டது.
ஒரு கிலோ தங்கத்தூள்
தங்கத்தூள் மிதந்தது. 5 மசாலா தூள் பாக்கெட்டுகளையும் கரைத்தபோது ஒரு கிலோ தங்கத்தூள் கிடைத்தது.
ரூ.30 லட்சம் தங்கத்தூள்
நூதனமாக தங்கம் கடத்திவரப்பட்டதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தூளை பறிமுதல் செய்து, ராஜன்பாபுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications