சசிகலா பெயரில் கோடிக்கணக்கில் மோசடி செய்த தூத்துக்குடிக்காரர் கைது
தூத்துக்குடி: முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் பெயரைச் சொல்லி பலரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார்(52) என்பவர் தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார். அவர் தனக்கு தெரிந்தவர்களிடம் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா எனது மனைவியின் சொந்தக்காரர் என்று கூறி வந்துள்ளார். மேலும் தனது மனைவி மூலம் சசிகலாவிடம் தெரிவித்து உங்களுக்கு அரசு வேலை, டெண்டர், துறைமுகத்தில் பணி வாங்கித் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அவரை நம்பி வேலை கிடைக்கும் என்ற ஆசையில் பலர் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கும்போது அவர் சசிகலாவிடம் போனில் பேசுவது போல் நடித்து வந்துள்ளார். அவரை நம்பி சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் விஜயகுமாரிடம் வேலைக்காக கோடிக் கணக்கில் பணம் கொடுத்துள்ளனர்.
விஜயகுமார் கடந்த 5 ஆண்டுகளாக பலரை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவரிடம் ஏமாந்தவர்களில் சிலர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அமைக்கப்பட்ட தனிப்படையினர் விஜயகுமாரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சசிகலாவின் பெயரைச் சொல்லி பலரை மோசடி செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications