3வது மனைவியுடன் தகராறு… 2வது மனைவிக்கு பிறந்த மகளை கழுத்தறுத்து கொன்ற குடிகார தந்தை
நாகப்பட்டினம்: மூன்றாவது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகளை கழுத்தறுத்து கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள போலகம் கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (48). விவசாய கூலி தொழிலாளி.
இவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவி பவானி, 2வது மனைவி சவுந்திர வள்ளி ஆகியோர் இறந்து விட்டனர். இதனை தொடர்ந்து உமாபதி என்ற பெண்ணை 3வதாக திருமணம் செய்து இருந்தார்.
இவரது 2 வது மனைவிக்கு பிறந்த மகள் சங்கீதா (16) போலகம் அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று இரவு ராமகிருஷ்ணன் குடி போதையில் வீட்டிற்கு வந்தார். அவர் மனைவியுடன் தகராறு செய்தார். இதனால் உமாபதி கோபித்து கொண்டு வெளியே சென்று விட்டார்.
வீட்டில் இருந்த சங்கீதா தந்தையை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன் மகள் என்று பாராமல் சங்கீதாவின் கழுத்தை அரிவாளால் அறுத்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இது குறித்து திட்டச்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் நாகை மாவட்ட எஸ்.பி அபினவ் குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சசான் சாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.
கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை தொடர்பாக இன்ஸ்பெக்டர் செங்கமலக் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் இனியவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். மகள் என்றும் பாராமல் குடிபோதையில் கொலை செய்த ராமகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த சம்பவம் திட்டச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications