கள்ளக்காதலைக் காக்க... கணவரை தூண்டிவிட்டு மாமியாரை கொலை செய்த மருமகள்: 2 பேர் கைது
சென்னை: கள்ளத் தொடர்பினை கண்டித்த மாமியாரை அவரது மகனை வைத்தே தீர்த்துக் கட்டியுள்ளார் மருமகள். திருவள்ளூர் அருகே இந்த திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது.
திருவள்ளூர் அருகே ஏகாட்டூர் கணபதி நகரை சேர்ந்தவர் சந்திரன் (56). இவரது மனைவி வசந்தி (50). இவர்கள் ஆவடி ரயில்வே ஸ்டேஷன் சாலையில் பழ வியாபாரம் செய்தனர்.
கடந்த 25ம் தேதி, இரவு வசந்தி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கடம்பத்தூர் போலீசார், வசந்தியின் கணவர் சந்திரன், மகன் பாபு ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தனது நண்பர் உதவியுடன் கொலை செய்ததை மகன் பாபு ஒப்பு கொண்டார். இதையடுத்து பாபு மற்றும் அவரது நண்பர் கார் டிரைவர் கார்த்திக் (20) ஆகியோரை வெள்ளிக்கிழமை காலையில் போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பாபுவின் மனைவி விஜயலட்சுமிக்கும், கார்த்திக்கிற்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதையறிந்த வசந்தி, தனது மருமகள் விஜயலட்சுமியை கண்டித்தார்.
இதனால் மாமியாரை தீர்த்து கட்ட நினைத்த விஜயலட்சுமி தன் கணவரிடம், ‘உங்க அம்மா அடிக் கடி திட்டுகிறார்' என்று நாடகமாடிவிட்டு, தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.கடந்த 25ம் தேதி, இரவு பாபு ஆவடி சென்று விஜயலட்சுமியை அழைத்தார். அதற்கு விஜயலட்சுமியோ, உன் தாய் செத்தால்தான் வருவேன் என்று கூறி விட்டார்.
இதனால் நண்பர் கார்த்திக்குடன் சேர்ந்து மது அருந்தினார் பாபு. அப்போது போதையில் இருந்த பாபுவிடம் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் வசந்தியை தீர்த்துக்கட்டும் வகையில்,பேசினார். ‘உன் தாய் பேச்சைக் கேட்டால், அழகான மனைவியை நீ இழந்து விடுவாய். எனவே உன் அம்மாவை தீர்த்துகட்டிவிடலாம். உன் அம்மாவை தீர்த்துக்கட்ட நானும் வருகிறேன்' என கார்த்திக் கூறவே பாபுவும் அதற்கு உடன்பட்டுள்ளார்.
இதையடுத்து 25ம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்த வசந்தியை இருவரும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
கள்ளக்காதலனுக்காக மனைவி ஆடிய நாடகம் தெரியாமல் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு சிறையில் அடைபட்டுள்ளார் பாபு. ஆவடி பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.