குடிபோதையில் மோதிய சமையல்காரர்- கல்லால் அடித்து கொலை செய்த நண்பர்
சென்னை: சென்னை மதுரவாயலில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைப் போட்டு சமையல்காரரை கொலை செய்த அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
மதுரவாயல், எம்.எம்.டி.ஏ காலனி, 5வது பிளாக் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலை கல்லால் தாக்கப்பட்டு ரத்தம் வழிந்திருந்தது. ரத்தக்கறை படிந்த கல் ஒன்று அருகில் கிடந்தது. தகவல் அறிந்ததும் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த சமையல்காரர் அப்துல்கரீம் என்பது தெரியவந்தது. இவருக்கு ரம்ஜான்பீபி என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு சம்பவம் நடந்த இடத்தில் அப்துல்கரீம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக குடிபோதையில் கந்தசாமி நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் நடந்து வந்து கொண்டிருந்தார். இவர் அப்துல்கரீமின் நண்பர். அப்போது எதிர்பாராதவிதமாக அப்துல்கரீம் வினோத் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் இருவரும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. ஆத்திரம் அடங்காத வினோத் அருகில் கிடந்த கல்லை எடுத்து அப்துல்கரீம் தலையில் போட்டார்.
இதில் ரத்த வெள்ளத்தில் அப்துல்கரீம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோத்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications