மனைவியின் கள்ளக்காதல் – கள்ளக் காதலனின் தந்தையை வெட்டிக் கொன்ற கணவர்
கோவை: கோவையில் கள்ளக்காதலால் மனைவியை பறிகொடுத்தவர், மனைவியின் கள்ளக்காதலரின் தந்தையை வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியை அடுத்த போடிபாளையத்திலுள்ள முத்துபாண்டி என்பவரின் வீட்டில் வசித்து வந்தவர் அருணாசலம். இவர் நேற்று காலை போடிபாளையம் - மலுமிச்சம்பட்டி ரோட்டிலுள்ள கிருஷ்ணா நகர் எனும் காலியிடத்தில் தலை மற்றும் முகத்தில் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
அவ்வழியே வந்தவர்கள் இதுகுறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சடலத்தை மீட்ட போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட அருணாசலத்துக்கு விக்னேஸ்வரன் எனும் மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த ஓராண்டுக்கு முன் வரையிலும் அருணாசலம் தன்னுடைய மகன் விக்னேஸ்வரனுடன் வசித்து வந்துள்ளார். அச்சமயத்தில் திருச்சியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அவரது மனைவி மஞ்சுளா மற்றும் மூன்று குழந்தைகளுடன் போடிபாளையத்துக்கு குடி வந்தார்.
அங்கிருந்த போது ஆறுமுகத்தின் மனைவி மஞ்சுளாவுக்கும் அருணாச்சலத்தின் மகன் விக்னேஸ்வரனுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் கிணத்துக்கடவு அருகேயுள்ள காரச்சேரிக்கு சென்றுவிட்டனர். மனைவியை விட்டுவிட்டு ஆறுமுகம் குழந்தைகளுடன் மீண்டும் திருச்சிக்கே சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மனைவியை தேடி போடிபாளையம் வந்த ஆறுமுகம், அருணாசலத்திடம் சென்று விக்னேஸ்வரன்-மஞ்சுளா குடியிருக்கும் இடத்தை கூறுமாறு கேட்டு தகராறு செய்துள்ளார்.
தனது மகனை குறித்து தனக்கு எந்த தகவலும் தெரியாது என அருணாசலம் கூறியுள்ளார். நள்ளிரவு 12:00 மணிக்கு போதையில் மீண்டும் அருணாசலம் வீட்டுக்குச் சென்ற ஆறுமுகம் அவரை வெளியே அழைத்து வந்து அவரை கல்லால் தாக்கி கொலை செய்ததாக தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.