ஜெயலலிதா பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி!
லோக்சபா தேர்தலையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று செவ்வாய்கிழமையன்று சிதம்பரத்தில் பிரசாரம் செய்தார்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் மா.சந்திரகாசியை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, முதல்வர் ஜெயலலிதா சுமார் 4.20 மணியளவில் சிதம்பரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கினார்.
அப்போது, ஜெயலலிதாவை பார்ப்பதற்காக பொதுக்கூட்டத்திற்கு வந்தவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலில் சிக்கிய அரியலூர் மாவட்டம், டி.பழூர் ஒன்றியம், அணைக்கூடம் கிராமத்தைச் சேர்ந்த நந்தன் என்பவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் நந்தன் சிதம்பரம், காமராஜர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
முதல்வர் ஜெயலலிதா சிதம்பரம் பிரசாரம் செய்து கொண்டிருந்ததையடுத்து, நந்தன் மரணம் அடைந்த செய்தியை மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக அறிவிக்கவில்லையாம். ஜெயலலிதா அங்கிருந்து கிளம்பிய பிறகுதான் அறிவித்திருக்கிறார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.