தொழிலில் நஷ்டம்: மனைவி, மகளைக் கொன்று ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை
ராஜபாளையம்: ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் மனமுடைந்த ஒருவர் தன் மனைவி, மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராஜபாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பியுள்ளார். லட்சுமியாபுரம் பகுதியில் சொந்தவீடு கட்டுவதால், துரைசாமிபுரத்தில் வாடகைக்கு குடியிருந்துள்ளார்.
செந்தில்குமார் செய்து வந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மனமுடைந்த செந்தில் கடந்த ஓராண்டாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை செந்தில் குமாரின் வீட்டிற்கு வந்த அவரது நண்பர் போத்திராஜன் வீட்டில் செந்தில் குமார் தன் மனைவி மற்றும் 6 வயது மகளுடன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் செந்தில் குமாரின் வீட்டில சோதனை நடத்தியபோது, செந்தில் குமார் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், முப்பிடாதி என்பவர் தனக்கு தர வேண்டிய ரூ.1 லட்சத்தையும் வீட்டு பீரோவில் உள்ள நகைகளையும் தனது மாமாவிடம் ஒப்படைக்குமாறு எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தங்கள் மரணத்திற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜபாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.