இன்ஸூரன்ஸ் நிறுவனத்தில் ”கொள்ளை” அடித்து ஆட்டோ வாங்கியவர் கைது!
திருப்பூர்: திருப்பூரில் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் கொள்ளை அடித்து அதன்மூலம் ஆட்டோ வாங்கி ஓட்டிக் கொண்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகிலுள்ள கொண்டரசம்பாளையம் அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அலங்கியம் சாலையில் இருந்து ஒரு ஆட்டோ வேகமாக வந்தது. போலீசார் அந்த ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். ஆனால், ஆட்டோவை ஓட்டி வந்த வாலிபர் வண்டியை மட்டும் நிறுத்தி விட்டு இறங்கி வேகமாக பக்கத்தில் இருந்த சந்துக்குள் ஓடியுள்ளார்.
இதனால், சந்தேகம் கொண்ட போலீசார் அவரை பின் தொடர்ந்து விரட்டிச் சென்று கொஞ்ச தூரத்தில் அவரை பிடித்தனர்.
பின்னர் தாராபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவர் பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த மாசானமுத்து என்பது தெரியவந்தது.
மேலும் அவர், தாராபுரத்தில் உள்ள "யுனைடெட் இந்திய காப்பீட்டு நிறுவனத்தில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 384 ரூபாயை கொள்ளையடித்தவர் என்பதும் தெரியவந்தது.
பின்னர் நடத்திய முறைப்படியான தொடர் விசாரணையில் மாசானமுத்து காப்பீட்டு நிறுவனத்தில் கொள்ளையடித்த பணத்தில் ஆட்டோ வாங்கி பூண்டு வியாபாரம் செய்து வருவதாக கூறியுள்ளார்.
காப்பீட்டு நிறுவனத்தில் கொள்ளையடித்தபோது சிக்கிய டி.டி மற்றும் காசோலைகளை கிழித்து எறிந்து விட்டதாகவும் கூறிய அவர் மீது ஆழியாறு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு பதிவாகி உள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications