நகை, பணத்திற்காக 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இஸ்திரி கடைக்காரர்
தேனி: பணம் மற்றும் நகைக்கு ஆசைப்பட்டு 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள இந்திரா நகர் காலனியைச் சேர்ந்தவர் பிரோஸ்கான்(35). அவர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முண்டகயத்தில் இஸ்திரி கடை வைத்திருக்கையில் ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு அவர் உத்தமபாளையத்தில் குடியேறினார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். போதிய வருமானம் இல்லாமல் அவதிப்பட்ட அவர் குடையந்தூரில் இஸ்திரி கடை வைத்துள்ளார்.
தனது கடைக்கு துணி தேய்க்க கொடுக்க வந்த ஒரு பெண்ணுடன் பிரோஸ்கானுக்கு பழக்கம் ஏற்பட்டது. தனக்கு திருமணமாகவில்லை என்றும், பெற்றோர் இல்லை என்றும் அவர் அந்த பெண்ணிடம் பொய் கூறியுள்ளார். அவரின் பொய்யை நம்பிய அந்த பெண் பிரோஸ்கானுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது மனைவியை வாடகை வீட்டில் தங்க வைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் வெங்கலூரைச் சேர்ந்த பெண் ஒருவரையும் திருமணம் செய்துள்ளார். மூன்று மனைவிகளையும் ஒருவருக்கொருவர் தெரிந்துவிடாமல் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். தினமும் ஒரு மனைவியின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். யாராவது ஒரு மனைவி இன்று இரவு ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று கேட்டால் கடையில் தூங்கியதாக கூறி வந்துள்ளார்.
இந்த சூழலில் தான் அவரின் முந்தைய திருமணங்கள் பற்றி அவரின் 3வது மனைவிக்கு தெரிய வந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரோஸ்கானை கைது செய்தனர். நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு இப்படி செய்துவிட்டதாக அவர் போலீசில் தெரிவித்துள்ளார். 3 பெண்களை அவர் திருமணம் செய்ய அவரின் அண்ணனும், அண்ணியும் உதவியுள்ளதும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications