ஊட்டி: 4வது மனைவியை அடித்துக் கொன்ற குடிகார கணவர் கைது
நீலகிரி: தனது நான்காவது மனைவியை அடித்துக் கொலை செய்த மினி பஸ் டிரைவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி கிரீன்பீல்டு பகுதியை சேர்ந்த மினி பஸ் டிரைவர் துரை. இவருக்கு தேவி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர், தேவிக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டதாகக் கூறி அருகிலிருந்த மருத்துவமனையில் தேவியை அனுமதித்துள்ளார் துரை. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தேவி பரிதாபமாக இறந்தார்.
தேவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, தேவியின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து விட்டனர். எனவே, துரை-தேவி தம்பதியினருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆவதால், இது வரதட்சனை சம்மந்தப்படதாக இருக்கலாம் என கருதி, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது
அதனைத் தொடர்ந்து, எஸ்.பி., அனிதா மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், தேவியை துரை தாக்கி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. துரை மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று அவரைக் கைது செய்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.
இந்த வழக்கு குறித்து ஊட்டி போலீசார் கூறுகையில்,"துரைக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. அவர் தேவியுடன் வசித்து வந்தாலும், ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்துள்ளார். இதனால், அவருக்கும் தேவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் துரை அடித்ததால் தான் தேவி இறந்துள்ளார்,' எனத் தெரிவித்துள்ளனர்.