துணிகளுக்கு இடையே 1 லட்சம் அமெரிக்க டாலரை பதுக்கி சிங்கப்பூருக்குக் கடத்த முயன்றவர் கைது
சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று சிங்கப்பூருக்கு செல்ல இருந்த விமானத்தில் அமெரிக்க பணத்தைக் கடத்தல் செய்ய இருந்தவர் சுங்க இலாகாத் துறையினரால் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.
நேற்று புறப்பட இருந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது திருவாரூரை சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் சுற்றுலா விசாவில் சிங்கப்பூருக்கு செல்ல வந்திருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரது சூட்கேசுகளை சோதனை செய்தனர்.
அப்போது அவர் துணிகளுக்கு இடையே மறைத்து வைத்து, கடத்தி செல்ல இருந்த 1 லட்சம் அமெரிக்க டாலர்களை கண்டுபிடித்தனர். இவற்றின் இந்திய மதிப்பு ரூபாய் 60 லட்சம் ஆகும்.
இதையடுத்து நிஜாமுதீனின் விமான பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்து, அவரை கைது செய்தனர். மேலும் அவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு அவர் ஏற்கனவே சென்று வந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து அந்தப்பணம் ஹவாலா பணமா அல்லது நிஜாமுதீன் ஹவாலா கும்பலை சேர்ந்தவரா என சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.