வேலூரில் சீக்கிரம் பணக்காரன் ஆக ஆசைப்பட்ட ஐடி ஊழியர்.. போன இடம் தான் ட்விஸ்ட்
வேலூர்: குறுக்குவழியில் பணம் சம்பாதித்து வெற்றிபெற இன்றைக்கு பலர் விரும்புகிறார்கள். ஒரே நாளில் பணம் கொட்ட வேண்டும்.. குறுகிய காலத்திலேயே செல்வந்தர் ஆக வேண்டும் என்று சிலர் ஆசைப்படுகிறார்கள். அதற்காக யூடியூப் பார்த்து தவறான பாதையில் செல்கிறார்கள். அப்படியான முட்டாள்தனங்களை படித்தவர்களே செய்கிறார்கள் என்பது தான் ஆச்சரியமானது. வேலூரில் ஐடி ஊழியருக்கு வந்த ஆசையால் கம்பி எண்ணுகிறார்.
இன்றைய உலகில் இன்ஸ்டா, யூடிப்பில் வருவது தான் பலருக்கு பொழுதுபோக்கு, அதுதான் உலகம் என்று பலர் வாழ்கிறார்கள். அதில் வரும் எல்லாமே நல்ல விஷயங்கள் இல்லை.. ஆனால் சிக்கிரம் பணக்காரன் ஆக விரும்பும் பலர் இதில் வரும் தகவல்களை நம்பி தவறான முடிவெடுக்கிறார்கள்.

விரைவில் செல்வந்தனாக விரும்பும் பலர் தவறான பாதையில் செல்கிறார்கள். அந்த பாதையில் செல்லும் போது, முதலில் பணம் கொட்டும். ஆனால் சட்டவிரோத செயல் என்பதால் ஒரு நாள் அவர்களை போலீசார் கண்டுபிடித்துவிடும். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல் சிக்கி கொள்கிறார்கள். அப்படி சிக்கும் போது, சம்பாதித்த அத்தனையும் ஒரே நாளில் போய்விடும். அப்படியே காப்பாற்றினாலும், என்றாவது ஒரு நாள், போலீசிடம் காலியாகிவிடுவார்கள். இதுதான் இதுவரையில் நடந்துள்ளது. வேலூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
வேலூர் சத்துவாச்சாரி, வள்ளலார் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அண்மையில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிஎஸ்பி தனுஷ்குமார் மேற்பார்வையிலான தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வேலூர் வள்ளலாரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பிற்கு பிறபகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அவ்வப்போது வந்து செல்வது தெரியவந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று வந்த ஒரு இளைஞரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் கிருஷ்ணா (வயது 30) என்பவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து சத்துவாச்சாரி மற்றும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கிருஷ்ணாவின் வீடு மற்றும் குடியிருப்பு வளாகத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தில் 4 கஞ்சா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தை கண்டுபிடித்தனர்.
அதைத்தொடர்ந்து கிருஷ்ணாவை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், அவர் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும், ஆந்திர மாநிலம் புங்கனூருக்கு நேரில் சென்று கஞ்சாவை வாங்கி வந்து பாழடைந்த கட்டிடத்தில் பதுக்கி வைத்து தெரிந்த நபர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. அதேபோல் கடத்தி வருவது ஒருபுறம் எனில், சில சமயங்களில் கூரியரில் வீட்டிற்கு கஞ்சாவை வரவழைத்தும் விற்றுள்ளாராம். இதையடுத்து கிருஷ்ணா மீது போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வேலூர் போலீசார் கூறுகையில், "கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக கிருஷ்ணா மீது ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. வேலூரில் பணிபுரிந்து வந்த கிருஷ்ணாவின் தந்தை ராஜா தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார்கள். கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா?, கிருஷ்ணாவிடம் இருந்து யாராவது கஞ்சா மொத்தமாக வாங்கி சென்றார்களா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்கள்.














Click it and Unblock the Notifications