பாலிசி போட்டோவை கிராபிக்ஸ் மூலம் ஆபாச படமாக்கி மிரட்டல் – எல்.ஐ.சி முகவரின் கணக்காளர் கைது
சேலம்: சேலத்தில் எல்.ஐ.சி. பாலிசி எடுத்த பெண்ணின் படத்தை ஆபாச படமாக்கி பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் நகரிலுள்ள கோட்டை, பழைய மார்க்கெட் தெருவை சேர்ந்த ராஜேஸ்கண்ணா. இவரது மனைவி பெயர் லோகேஸ்வரி. இருவருக்கும், ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.
தற்போது, லோகேஸ்வரி ஆறுமாத கர்ப்பிணியாக உள்ளார். ராஜேஸ்கண்ணா அருகிலுள்ள ஒரு எல்.ஐ.சி முகவரிடம் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது வீட்டுக்கு அருகே வசிக்கும் எல்.ஐ.சி பாலிஸிதாரரான ஒரு பெண்ணின் படத்தை தான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து எடுத்து, அதை கிராபிக்ஸ் மூலம் நிர்வாண படமாக தயார் செய்துள்ளார்.
பின் அந்த நிர்வாண படத்தை, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அனுப்பி தனக்கு மூன்று லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டும், அப்படி பணம் கொடுக்கவில்லை என்றால், படத்தை இணைய தளத்தில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.
பிறகு இது தொடர்பாக, அப்பெண்ணின் கணவரான வெள்ளி வியாபாரியிடம், மொபைலில் பலமுறை தொடர்பு கொண்டு பேரம் பேசி உள்ளார். ஒரு கட்டத்தில், ஒரு லட்ச ரூபாய் தராவிட்டால் இன்டர்நெட், பேஸ் புக், இ மெயிலில் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்வதாக எச்சரித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்னின் கனவர் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் அறிவுரைபடி வெள்ளி வியாபாரி மொபைலில் மிரட்டல் விடுத்த வாலிபருடன் தொடர்ந்து பேசி பணம் கொடுப்பதாக கூறி அவரை செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு இடத்திற்கு வரும்படி சொல்லியுள்ளார்.
பணம் வாங்குவதற்காக அங்கே வந்த ராஜேஸ்கண்ணாவை போலீஸார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கிராபிக்ஸ் மூலம் பெண் படத்தை நிர்வாணமாக்கி பணம் கேட்டு மிரட்டியதை ஒப்புகொண்டார். இதை தொடர்ந்து, ராஜேஸ்கண்ணாவை கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.